ஆஹா.. வந்துருச்சு வெயில்... சென்னையில் மெல்ல எட்டிப் பார்க்கும் சூரியன்... சூடு பிடிக்கும் ‘தீபாவளி’
சென்னை: சென்னையில், கடந்த நான்கைந்து நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த மழை தற்போது நின்றுள்ளது. வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி, சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது.
விற்பனை மந்தம்...
நாளை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப் பட உள்ள நிலையில் தொடர் மழை காரணமாக சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. பட்டாசு விற்பனையும் மந்தமாகக் காணப்பட்டது.
லேசான தூறல்...
சென்னையில் நேற்று மதியம் முதலே மழை அளவு சற்றுக் குறையத் தொடங்கியது. அவ்வப்போது லேசான தூறல் மட்டும் காணப்பட்டது.
சிறுவர்கள் குஷி...
இதனால், ஆங்காங்கே பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கினர். சிறுவர்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே கம்பி மத்தாப்பூ, புஸ்வானம், தரைச்சக்கரம் உள்ளிட்ட பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்ந்தனர்.
கொஞ்சம் வெயில்...
இந்நிலையில், இன்று காலை கருமேகமூட்டம் மறைந்து சூரியன் தலை காட்டியது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் குளிரில் தவித்து வந்த சென்னை மக்களுக்கு லேசான வெயில் கதகதப்பைத் தந்தது.
மக்கள் நடமாட்டம்...
மழை காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்கள் இன்று வெளியில் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் சாலைகள் மற்றும் கடைகளில் சற்றுக் கூட்டம் காணப் படுகிறது.
சூடு பிடிக்கும் வியாபாரம்...
இதனால் பட்டாசுக் கடைக்காரர்கள் மற்றும் துணிக்கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை காரணமாக தொய்வு கண்ட வியாபாரம் இன்று சூரியன் புண்ணியத்தால் சூடு பிடிக்கும் என அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
மழை நீடிக்கும்...
இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்கு னர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தென்மேற்கு வங்க கடலில் கடந்த சில நாட்களாகவே நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசை நோக்கி சற்று நகர்ந்து இன்று (நேற்று) காலை 8.30 மணிக்கு தமிழக கடலோர பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் தொடர்ந்து நீடிக்கிறது.
விட்டு விட்டு மழை...
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓரிரு இடங்களில் கனமழை இருக்க கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும்.
மழை குறைய வாய்ப்பு...
வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்தால் மழை குறைய வாய்ப்பு உள்ளது. இது புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாகவே உள்ளது' எனத் தெரிவித்திருந்தார்.
குடை...
இதனால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் குடை, ரெயின்கோட் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்கின்றனர்.
பலி...
இதற்கிடையே தமிழகம் முழுவதும் தொடர் மழைக்கு இதுவரை 13 பேர் பலியாகி இருப்பதாகவும், இதில் பெரும்பாலானவர்கள் சுவர் இடிந்து உயிரிழந்ததாகவும் தெரிய வந்துள்ளது.