அவைத்தலைவர் பதவி தேவையில்லை: தேமுதிக செயற்குழுவில் தீர்மானம்
தே.மு.தி.க,வின் செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தே.மு.தி.க.வின் எதிர்கால திட்டங்கள் குறித்தும், பாராளுமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசித்து பேசினார்.
இந்த செயற்குழுவில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் எதிர்க்கட்சித் துணை தலைவராகவும், தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினராகவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அவைத் தலைவராகவும் செயல்பட்டு வந்த பண்ருட்டி ராமச்சந்திரன், அவர் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக அறிவித்து விட்டு, எழுத்துப் பூர்வமான கடிதத்தை, கழக நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த்துக்கு அனுப்பியுள்ளார். கழக அவைத் தலைவர் பதவியில் இருந்து விலகியதை இச்செயற்குழு ஏகமனதாக ஏற்றுக்கொள்கிறது.
மேலும், தே.மு.தி.க. அவைத் தலைவர் என்கின்ற பதவி இனி தேவையில்லை என்ற கருத்து செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவராலும் வலியுறுத்தப்பட்டதன் காரணமாக, தலைமை கழக நிர்வாகத்தில் இருந்த கழக அவைத் தலைவர் என்ற பதவி முற்றிலுமாக நீக்கப்படுவதை இச்செயற்குழு ஏகமனதாக அங்கீகரிக்கிறது.
கழகத்தின் பல்வேறு பதவிகளுக்கு புதியதாக நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கும், நிர்வாகிகளை மாற்றம் செய்வதற்கும், நிர்வாகிகளை விடுவிப்பதற்குமான அதிகாரத்தை கழக நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த்துக்கு இச்செயற்குழு ஏகமனதாக அளிப்பது உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.