விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது: பாஜக தலைவர் முரளிதர் ராவ்
சென்னை: ஊழலை ஒழிக்க நினைக்கும் தேமுதிக திமுகவுடன் சேரக் கூடாது. திமுகவுடன் சேர்ந்தால் ஊழலை ஒழிக்க முடியாது என்று பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க திமுகவும், பாஜகவும் அதீத முயற்சி செய்து வருகின்றன. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். ஆனால் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றது தேமுதிக.
இந்நிலையில் தேமுதிக தேர்தல் குழு டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை ஜவடேகர் மறுத்துவிட்டார். இந்த சூழலில் பாஜக மேலிட பொறுப்பாளர் முரளதர ராவ் கூட்டணி குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஊழலை ஒழிக்க விரும்பும் எந்த கட்சியும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் அது நடக்காது. தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ஒரு மாற்றமும் ஏற்படாது.
பாஜக மாற்றத்தை நம்பும் கட்சி ஆகும். ஊழலை ஒழிக்க விரும்பும் தேமுதிக திமுக கூட்டணியில் சேரக் கூடாது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது என்றார்.
இதற்கிடையே தேமுதிக தங்கள் கூட்டணிக்கு நிச்சயம் வரும் என்று திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.