அங்கிட்டு வைகோ- பிரேமலதா மோதல்; இங்கிட்டு தேமுதிக ஆதரவு கேட்டால் பரிசீலிப்போம்- திருமாவளவன்!
அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதி தேர்தலில் தேமுதிக ஆதரவு கேட்டால் அது குறித்து பரிசீலிப்போம் என திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக ஆதரவு கேட்டால் அது குறித்து பரிசீலிப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதிமுக, இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகளை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணியில் தொடர்ந்து சலசலப்பு இருந்து வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்தது தவறு என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியிருந்தார்.
ஆனால் வைகோவின் இந்த கருத்துக்கு இடதுசாரி தலைவர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். மேலும் வைகோவின் கருத்துகளால் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கடும் கோபத்தில் இருப்பதையும் கடந்த சனிக்கிழமையன்று நமது ஒன் இந்தியா செய்தி பதிவு செய்திருந்தது.
வைகோ மீது காட்டம்
இதை உறுதிப்படுத்தும் வகையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, வைகோ தினமும் ஒரு பேச்சு பேசுவர்; அவர்தான் தேமுதிக கூட்டணி வேண்டும் என தேடி வந்தார். அவரே இப்போது விமர்சனங்களை முன்வைப்பதால் அவர்தான் இந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்லவும் வேண்டும் என காட்டமாக கூறியிருந்தார்.
திருமா தடலாடி
இதனிடையே சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக ஆதரவு கேட்டால் அது குறித்து பரிசீலிப்போம் என்றார்.
வைகோ முடிவுக்கு எதிராக...
அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதி தேர்தலை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கிறது; அத்தொகுதிகளில் யாருக்கும் ஆதரவும் இல்லை என வைகோ திட்டவட்டமாக கூறியிருந்தார். தற்போது தேமுதிக ஆதரவு கேட்டால் பரிசீலிப்போம் என திருமாவளவன் கூறியிருக்கிறார்.
தொடரும் சலசலப்பு
ஏற்கனவே காவிரி பிரச்சனைக்கான திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் நிலைப்பாடு; வேறுவழியில்லாமல் எங்களால் மக்கள் நலக் கூட்டணி உடைந்துவிடக் கூடாது என்பதற்காக அக்கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலையில் இருக்கிறோம் என திருமாவளவன் தெரிவித்திருந்தார். தற்போது திருமாவளவனின் இந்த கருத்தால் மக்கள் நலக் கூட்டணியில் தொடர்ந்து சலசலப்பு நீடித்து வருகிறது.