ஜெயலலிதா இனி புரட்சித் தலைவி இல்லை; வறட்சித் தலைவி- ஸ்டாலின் அதிரடி
சென்னை: திமுக ஆட்சியில் தொழில் புரட்சி ஏற்பட்டது, அதிமுக ஆட்சியில் தொழில் வறட்சி ஏற்பட்டுள்ளது எனவே, ஜெயலலிதாவை ‘வறட்சி தலைவி‘ என்றுதான் அழைக்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
திமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைச் சொல்லி வாக்கு கேட்கும் அதே சமயம் ஆளுங்கட்சியையும், முதல்வர் ஜெயலலிதாவையும் பாயிண்ட், பாயிண்ட்டாக போட்டு தாக்குகிறார். அவரது பிரசார பேச்சின் முக்கிய அம்சங்களையும் சில சுவாரஸ்யமான கருத்துக்களையும் உங்களுக்கு தொகுத்து அளித்துள்ளோம்.
கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்,
ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன் எண்ணற்ற வாக்குறுதிகளை வழங்கினார். தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றுவேன் என்றார். ஆனால், இன்று மின்சாரம் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.
பிழைப்புக்காக வேறு மாநிலம்
தென்னகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்ட கோவையில், முதலாளிகள் பிழைப்பு தேடி வேறு மாநிலத்திற்கு செல்ல வேண்டிய கொடுமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் மின்வெட்டு.
யானைகளை சந்திக்கும் முதல்வர்
தமிழகத்திற்கு வரவேண்டிய இந்த முதலீடுகள் வெளிமாநிலத்திற்கு செல்வதற்கு ஒரே காரணம் மின்வெட்டும் ஜெயலலிதாவும்தான். இதை பற்றியெல்லாம் ஜெயலலிதா கவலைப்படுவதில்லை. சிந்திப்பதில்லை. அவர் சந்திப்பதெல்லாம் யானைகளைத்தான்.
வறட்சித்தலைவி
திமுக ஆட்சியில் தொழில் புரட்சி நடந்தது. ஆனால், இன்று ஜெயலலிதா ஆட்சியில் தொழில் வறட்சி நடக்கிறது. ஜெயலலிதாவை புரட்சி தலைவி என்று அழைக்கக் கூடாது. வறட்சி தலைவி என்றுதான் அழைக்க வேண்டும்.
செய்தீர்களா... செய்தீர்களா?....
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கூட்டத்தினரைப் பார்த்து, செய்வீர்களா? செய்வீர்களா? என்று கேள்வி எழுப்புகிறார். நாம் கேட்கவேண்டும்... செய்தீர்களா? செய்தீர்களா? என்று! மின் தட்டுப் பாட்டைப் போக்க நடவடிக்கை எடுப்பேன் என்றீர்களே.. செய்தீர்களா? என்று கேட்க வேண்டும்.
பலான பலான தெல்லாம்
அதிமுகவினர் பலானபலானதெல்லாம் கொடுத்து கூட்டிய கூட்டத்தில்... தெளிவாகவே சொல்லிவிடுகிறேன்.. குவாட்டர், பிரியாணி கொடுத்து கூட்டிய கூட்டத்தில் முதல்வர் பேசுகிறார் என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஓட்டு போடுவீர்களா?
முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார பாணியை கிண்டல் செய்தும், விமர்சனம் செய்தும் பேசி வரும் ஸ்டாலின்... நீலகிரி தொகுதி வேட்பாளர் அ.ராசாவிற்கு வாக்கு கேட்கும் போது அதே பாணியை பின்பற்றினார். வாக்கு போடுவீங்களா?... வாக்குப் போடுவீங்களா என்றும் மக்களைப் பார்த்து கேட்டது இது விமர்சனத்திற்குள்ளானது.