அதிமுக ஆட்சியில் சிறைகளில் கூட பாதுகாப்பு இல்லை: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை: அதிமுக ஆட்சியில் சிறைச்சாலைகள் கூட பாதுகாப்பற்ற இடங்களாக மாறிவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி பிரச்சினை கடுமையாக இருக்கும்போது அதுபற்றி எதுவும் கூறாமல், மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதா உரையாற்றியுள்ளார். காவிரிப் பிரச்சினையில் கடும் வேதனைக்கு ஆளாகியிருக்கும் விவசாயிகளை அவர் மக்களாகவே கருதவில்லை போலும்.
அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதாவை பத்திரிகையாளர்கள் அணுகவே முடியவல்லை. அதேநேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை எளிதல் அணுக முடிகிறது. 2011-ல் ஆட்சிக்கு வந்ததும் செவ்வாய்க்கிழமைதோறும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பேன் என்றார். ஜனநாயகம் பற்றிய கவலை இருந்தால் தானே அவருக்கு பத்திரிகைகளைப் பற்றிய கவலை வரும்.
அதிமுக ஆட்சியில் சிறைச்சாலைகள் கூட பாதுகாப்பற்ற இடங்களாக மாறிவருகிறது. வேலூர் சிறையில் பேரறிவாளன் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுள்ளார். இது நடந்து ஒரு வாரத்துக்குள் சென்னை புழல் சிறையில் ராம்குமார் மர்மான முறையில் இறந்துள்ளார். இதனை தற்கொலை என காவல்துறையும், கொலை என மற்றவர்களும் கூறுகின்றனர்.
கடந்த மாதத்தில் கடலூர் சிறையில் 2 கைதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பபட்டது. கோவை மத்திய சிறையில் செந்தில்குமார் என்ற கைதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், இதுபற்றியெல்லாம் ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.