செம ஜோரா இணைந்து பறக்கும் திமுக - தேமுதிக கொடிகள்
சென்னை: சென்னையில் திமுக - தேமுதிக ஆகிய இரு கட்சிகளின் கொடிகளும் ஒன்றாக இணைந்து பறந்து கொண்டிருப்பது 'சிக்னல் வந்துருச்சு போல... கூட்டணி உறுதியாகிடுச்சோ' என பேசவைத்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த தேர்தலில் கணிசமான ஓட்டுக்களையும் வாங்கியது. அதேபோல் தற்போது நடைபெற உள்ள தேர்தல் தேமுகவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதனால் இந்த முறை கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் கணிசமாக தொகுதிகளை தன்வசப்படுத்தினால் மட்டுமே அரசியலில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்பது தேமுதிகவின் கணக்கு.
இந்நிலையில் தேமுதிக திருப்புமுனை மாநாடு காஞ்சிபுரம் வேடலில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணி குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை ஸ்டாலின் முடித்துள்ளார். இதன் நிறைவு விழா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாளை காஞ்சிபுரம் அருகே உள்ள ஆப்பூரில் நடைபெறுகிறது. இதில், மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதனால் திமுக மற்றும் தேமுதிக நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து தொடர்ந்து நடைபெறுவதால் தாம்பரம் முதலே இரண்டு கட்சியின் கொடிகள், பிரம்மாண்ட பேனர்கள் மற்றும் கொடிகம்பங்கள் நடும் பணிகளில் இருகட்சிகளின் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலைகளில் சில கிலோமீட்டர் தூரம் திமுக மற்றும் தேமுதிகவின் கட்சி கொடிகள் இரண்டும் இணைந்த படி பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கின்றன. இதனால் திமுக, தேமுதிக கூட்டணி பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.