சசிகலா எதிர்ப்பு மூலம் எகிரும் எடப்பாடியின் இமேஜ்: அதிர்ச்சியில் திமுக தலைமை!
சசிகலா எதிர்ப்பு மூலம் எடப்பாடியின் இமேஜ் அதிகரித்து வருவதை திமுக தலைமை அதிர்ச்சியுடன் பார்ப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: சசிகலா குடும்பத்துக்கு எதிர்ப்பு என்கிற அஸ்திரத்தை கையிலெடுத்ததன் மூலம் விஸ்வரூப ஆதரவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெற்று வருவது திமுக தலைமையை அதிர வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வராக இருந்த ஓபிஎஸ்-ன் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக் கொண்ட நாளில் இருந்தே, அ.தி.மு.கவில் இனி தங்களை எதிர்க்கக் கூடிய வலிமை பொருந்திய தலைவர் இல்லை என்றுதான் தி.மு.க நிர்வாகிகள் நினைத்தார்கள். ஆனால், சசிகலா எதிர்ப்பின் மூலம் பன்னீர்செல்வத்தின் இமேஜ் உயர்ந்ததை ஸ்டாலின் தரப்பினர் ரசிக்கவில்லை.
அடுத்து வந்த நாட்களில் கூவத்தூர் ஆபரேஷன் மூலம், சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வானார் சசிகலா. ஆனால், அவரால் சட்டசபைக்குள் நுழைய முடியவில்லை.
ஆட்சி மாற்ற எதிர்பார்ப்பு
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனையை எதிர்கொண்டார். அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள பிளவின் மூலம், ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் நினைத்தார் ஸ்டாலின். அதற்கேற்ப, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டசபைக்குள்ளேயே அமளியில் ஈடுபட்டனர் தி.மு.க எம்.எல்.ஏக்கள்.
திடீர் புரட்சி
சசிகலா குடும்பத்தின் ஆதரவில் முதல்வர் ஆனதால், எடப்பாடி பழனிசாமியை பினாமி அரசின் முதல்வர் என்றுதான் மக்கள் அழைத்தனர். அதற்கேற்ப, அவரும் தினகரன் தரப்பிடம் உறவாடி வந்தார். விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, கார்டனுக்குச் சென்றபோது தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பினர். இந்த திடீர் புரட்சியால், கட்சியில் இருந்தே ஒதுங்கினார் தினகரன்.
ஆட்சி கவிழவில்லை
இதன்பிறகு, ஆளுக்கு ஆள் அடித்துக் கொண்டு ஆட்சியைக் கவிழ்ப்பார்கள் என எதிர்பார்த்தார் ஸ்டாலின். அதற்கான சூழல்கள் அமையாமல், மூன்று குழுவுக்குள்ளும் வாய்த் தகராறு மட்டும் நீடித்து வருகிறது.
சசிகலா எதிர்ப்பு அஸ்திரம்
அதேநேரத்தில் தற்போது சசிகலா எதிர்ப்பை முன்வைத்து, எடப்பாடி பழனிச்சாமி விஸ்வரூபமாக வளர்ந்து வருவதை திமுக தலைமை விரும்பவில்லையாம். ஆகவேதான், டி.ஜி.பி நியமனம், குட்கா விவகாரம், அதிகாரிகள் மாற்றம் உள்பட எடப்பாடி அரசின் அனைத்து தவறுகளையும் சுட்டிக் காட்டி உக்கிரம் காட்டுகிறது திமுக தலைமை.
புதிய வியூகம்
சட்டசபையிலும் தங்கள் எதிர்ப்பை வலுவாகப் பதிய வைக்கிறார். வரும் சட்டசபை தேர்தலில் எடப்பாடியா? ஸ்டாலினா என்ற நிலை உருவாவதையும் திமுக தலைமை எதிர்பார்க்கவில்லை. இதற்கேற்ப புதிய வியூகங்களுடன் அடுத்த அரசியல் காய்நகர்த்தல்களை திமுக தலைமை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாம்.