பாஜகவுடன் கை கோர்க்கும் அதிமுக- கூட்டணியில் இருந்து விலகும் இடதுசாரிகள்? தூது விடும் திமுக!!
சென்னை: லோக்சபா தேர்தலில் இடதுசாரிகளைக் கழற்றிவிட்டு பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி வைக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இதனால் இடதுசாரிக் கட்சிகள் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறுவது என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்'d கட்சி இடம்பெற்றன. ஆனால் கூட்டணியில் இருந்தாலும் இதுவரை எந்த தொகுதியும் ஒதுக்கவில்லை. ஆனால் அதிமுகவோ 40 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்த கையோடு பிரசாரத்தையும் தொடங்கிவிட்டது. அத்துடன் அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டும் வருகிறது.
ஆனால் அதிமுக அழைக்காதா என்று தேவுடு காத்துக் கொண்டிருந்தனர் இடதுசாரிகள். இந்த நிலையில்தான் இனியும் அதிமுக கூட்டணியில் நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து சென்னையில் கடந்த 2 நாட்களாக இடதுசாரிகள் ஆலோசனை நடத்தினர்.இந்த பஞ்சாயத்துக்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன..
ரெண்டுல ஒன்னு போச்சு தெரியுமா?
அ.தி.மு.க தரப்பு இடதுசாரிகளுக்கு தலா இரண்டு இடம்தான்.. ஆனால் இரு கட்சிகளுக்குமே தலா ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்துவிட்டதால் லோக்சபா தேர்தலில் இரண்டு கட்சிக்கும் ஒவ்வொரு இடம்தான் என்கிறது.
அதெப்படி கையெழுத்து போடுறது?
அத்துடன் ஜெயலலிதாவின் பிரச்சாரம் தொடங்கும் முன்பாகவே ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடவும் அதிமுக வலியுறுத்தியிருக்கிறது. ஆனால் இடதுசாரிகள் முரண்டு பிடித்திருக்கின்றனர். இதனால் ஜெயலலிதா கடும் கோபத்தில் இருந்திருக்கிறார்.
பாஜக அணிக்கு ஆதரவு?
மேலும் புதிய திருப்பமாக ஜெயலலிதா இடதுசாரிகளைக் கழற்றிவிட்டு பாரதிய ஜனதாவுடன் கை கோர்க்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அவமானம்.. அவமானம்..
ஏற்கெனவே தொகுதி பங்கீட்டில் அவமானப்படுத்திவிட்டு இப்போது பாஜகவுடன் அதிமுக கை கோர்ப்பதற்கு முன்பாக சிறிதளாவது மானத்தோடு கூட்டணியைவிட்டே வெளியேறுவோம் என்ற முடிவுக்கு இடதுசாரிகள் வந்திருப்பதாகவே கூறப்படுகிறது.
நாளை முக்கிய முடிவு- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
இந்த குழப்பங்கள் குறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ் மாநிலக் குழு செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீட்டில் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. கடந்த 15 நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் நாளை கலந்து ஆலோசிப்போம். அதன் பிறகு முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். ஜி. ராமகிருஷ்ணனின் வெளிப்படையான இந்த பேட்டி, அதிமுக மீதான கோபத்தையும் கூட்டணியிலிருந்து விலக முடிவு எடுத்துவிட்டோம் என்பதையும் வெளிப்படுத்துவதாகத்தான் கருதப்படுகிறது.
தூது விடும் முரசொலி
இந்த இடைவெளியில் திமுக இடதுசாரிகளுக்கு தூதுவிடத் தொடங்கியிருக்கிறது. திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில், கம்யூனிஸ்ட்களா? இல்லை அம்மாயிஸ்ட்டுகளா?' என்ற தலைப்பில் வெளியான கட்டுரை ஒன்று இப்படி பேசுகிறது..
தன்மானத்தை தட்டியெழுப்பும் திமுக ஜனநாயக நெறிமுறைகளை மதித்து கூட்டணிக் கட்சிகளை மதிக்கும் மரபில் தலைவர் கலைஞருக்கு நிகர் என்றுமே கலைஞர்தான்! பாரம்பரியம் மிக்க உலகளாவிய சிந்தனை கொண்ட இயக்கத்தினை அம்மையார் மதிக்கும் லட்சணம் இதுதான். ஜனநாயகச் சிந்தனைக்கும் அம்மையார் ஜெயலலிதாவுக்கும் இம்மிகூடத் தொடர்பில்லை என்பதை பலமுறை அவரே நிரூபித்துவிட்டார். தன்மான உணர்வுக்கும் தங்களுக்கும் தொடர்புண்டா என்பதை இனி பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள்தான் சொல்ல வேண்டும் என்கிறது அக்கட்டுரை.
நேரடி பேச்சு..
அத்துடன் இல்லாமல் திமுக தரப்பில் இருந்து நேரிடையாகவும் இடதுசாரித் தலைவர்களுடன் பேசவும் தொடங்கியிருக்கிறார்களாம். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தொண்டைக்குள் சிக்கிய முள்ளாக அவதிப்படுவதைவிட கூட்டணியைவிட்டு வெளியேறிவிடுவது என்பதுதான் இடதுசாரிகள் முடிவாக இருக்கிறது என்கின்றன டெல்லி தகவல்கள்.
சிபிஐ போகாது..
அப்படி அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் தா.பாண்டியன் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக அணிக்கு போகாது. அதே நேரத்தில் சிபிஎம் கட்சி திமுக அணிக்கு போகக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. இதை உணர்ந்துதான் முரசொலி இப்படி ஒரு தூதுவிடு படலத்தை அரங்கேற்றியிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இன்னும் என்னென்ன காட்சிகள் வருமோ?