அன்பு உடன் பிறப்புகளே... "மிஸ்ட் கால்" கொடுத்தால் நம்மை அழைத்துப் பேசும் கருணாநிதி!
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு புதுபுது பாணிகளைக் கையில் எடுத்துள்ளன. இதில் அதிமுக பேரணி, கூட்டம் என்று ஆரம்பித்தால், திமுகவோ செல்போனிலேயே வந்து மக்களிடம் ஓட்டு கேட்க ஆரம்பித்துள்ளது.
மு.க.ஸ்டாலின் "நமக்கு நாமே"வை கையில் எடுத்தால், திமுகவின் மூத்த தலைவரான கருணாநிதி மிஸ்டு கால் சிஸ்டத்தினை கையில் எடுத்துக் கொண்டுள்ளார்.
72200 72200 என்ற எண்ணுக்கு நீங்கள் அழைத்து மிஸ்டு கால் கொடுத்தால், மீண்டும் அவர்களே அழைக்கின்றார்கள். அதில் ரெக்கார்டட் வாய்ஸ் மூலமாக கருணாநிதி தனது பிரச்சார வார்த்தைகளை நமது காதுகளில் பரவ விடுகின்றார்.
அதில்," என் அன்பு உடன்பிறப்புக்களே வணக்கம். தமிழக மக்களின் நலன்காக்க அயராது பாடுபடும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு நல்கும் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். ஐந்தாண்டு கால இருள் விலகி தமிழகம் வளர்ச்சி பாதையில் நடை போட வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்" என்பதாக நீள்கின்றது கருணாநிதியின் பிரச்சார உரை.
ஏற்கனவே சென்னை வெள்ளத்தைத் தொடர்ந்து ஜெயலிதா வாட்ஸஆப் மூலம் ஆடியோ வடிவில் மக்களிடம் பேசினார் என்பது நினைவிருக்கலாம். மக்களும், மாநிலமும் ஹைடெக் ஆகின்றதோ இல்லையோ, தேர்தலுக்கு தேர்தல் அரசியல் கட்சிகள் மட்டும் ஹைடெக் ஆகி வருவதற்கு இவையெல்லாம்தான் உதாரணம்!