அதிமுக 5.75% வாக்குகளை இழந்தால் ஆட்சியை திமுக கைப்பற்றும்: என்.டி.டிவி பிரணாய் ராய்
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுகவின் 5.75% வாக்கு இழப்பால் திமுக வென்று ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக என்டிடிவியின் நிறுவனர் பிரணாய் ராய் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் இன்னும் 4 நாட்களில் தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த நிலையில் கடந்த கால தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று பிரபல கருத்துக் கணிப்பியல் நிபுணரும் (Psephologist) என்டிடிவி நிறுவனருமான பிரணாய் ராய் குழு கணித்துள்ளது.
இதன்படி இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத வகையில் 5 முதல்வர் வேட்பாளர்களோடு கட்சிகள் களத்தில் நிற்கின்றன. இதில் 36.5 சதவீத வாக்குகளை பெறும் அணி ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது என்றும் அதோடு தற்போதைய நிலையில் அதிமுக அணியிலிருந்து 5.75 சதவீத வாக்குகள் பிரிந்து திமுகவிற்கு செல்லும் நிலையே உள்ளது என்பதால் திமுக எளிதாக ஆட்சியை பிடிக்கலாம். ஆளும் அதிமுக மீதான உள்ள அதிருப்தி அலையால் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு இந்த வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறது பிரணாய் ராய் குழு.
மேலும் அதிமுகவுக்கு கடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் கிடைத்தது போன்று தற்போது கிடைப்பதற்கில்லை. 2011 மற்றும் 2014 தேர்தல்களில் பெரு வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு இம்முறை அப்படி கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இதற்கு காரணம் 1984-ம் ஆண்டிற்கு பிறகு தமிழக மக்கள் ஒருமுறை அதிமுக மறுமுறை திமுக என்றே வாக்களித்து வந்துள்ளனர்.
அதோடு சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியமைக்கும் கட்சி அடுத்த தேர்தலில் பெருவாரியான வாக்கு சதவீதத்தை இழந்து தோல்வியையே தழுவியுள்ளது. இதுவும் வரலாறு.
கடந்த 2011 தேர்தலில் அதிமுக கூட்டணி 203 இடங்களை கைப்பற்றியது அதுபோல 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 37 இடங்களை அதிமுக கைப்பற்றியது. இது சட்டசபை தேர்தலில் 217 இடங்களை பெறுவதற்கு சமமான வெற்றியாகும்.
இந்த தேர்தலை பொருத்தமட்டில் இதுவரை இல்லாத அளவில் 3 வது அணியாக சிறு சிறு கட்சிகளை கொண்ட மக்கள் நலக் கூட்டணியானது விஜயகாந்த் தலைமையில் 234 தொகுதிகளிலும் களம் காண்கிறது. அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவும் 234 தொகுதிகளிலும் தேர்தலை சந்திக்கிறது.
இது பல்வேறு வகைகளில் வாக்குகளை பிரிப்பதால் 36.5 சதவீதம் வாக்குகள் பெரும் கட்சி மட்டுமே 118 என்ற மேஜிக் எண்ணை பெற்று ஆட்சி அமைக்க முடியும்.
கடந்த கால தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் உதிரி கட்சிகளின் உறுதுணையோடு தேர்தலை சந்திக்கும் ஆளும் அதிமுக அணிக்கு இந்த தேர்தலில் 38 முதல் 44 சதவீத வாக்குகள் கிடைக்கலாம். சராசரியாக 42 சதவீதம் வாக்குகள் கிடைக்கலாம். இந்த சதவீத அடிப்படையில் பார்த்தால் அதிமுகவுக்கு 195 இடங்கள் வரை கிடைக்கலாம்.
திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு இருக்கின்ற வாக்கு சதவீத அடிப்படையில் அதாவது 31 சதவீத வாக்குகளின் அடிப்படையில் 46 இடங்கள் கிடைக்கும். மூன்றாவது அணிக்கு இரு இடங்களும் மற்றவர்களுக்கு 13 இடங்களும் கிடைக்கலாம்.
ஆனால் ஆளும் கட்சி மீதான அதிருப்தி அலையால் அதிமுக அணியிலிருந்து வெறும் 3 சதவீத வாக்குகள் பிரிந்து திமுக தரப்புக்கு சென்றாலே திமுகவுக்கு 62 இடங்கள் கிடைத்துவிடும். 5 சதவீத வாக்குகள் அதிமுகவிடம் இருந்து திமுக பக்கம் திரும்பினால் கூட 99 இடங்களையும் திமுக கைப்பற்றும்.
அதுவே வாக்குகள் 5.75 சதவீத வாக்குகள் திரும்பினால் திமுக எளிதாக 120 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்கும். அப்போது அதிமுகவுக்கு 94 இடங்கள் கிடைக்கலாம் என்கிறது என்.டி.டி.வியின் பிரணாய் ராய் குழுவின் ஆய்வு.