புயல் பாதித்த பகுதிகளை 3வது நாளாக நேரில் பார்வையிட்ட ஸ்டாலின்.. உணவு, உடைகள் வழங்கினார்
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னையின் பல பகுதிகளுக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
சென்னை: சென்னையில் புயல் பாதித்த பகுதிகளை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று மூன்றாவது நாளாக நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடைகளை வழங்கினார்.
வில்லிவாக்கம், திரு.வி.க. நகர், எழும்பூர், துறைமுகம் ஆகிய தொகுதிகளுக்கு நேரில் சென்று வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியதுடன், திமுகவினர் மேற்கொண்டு வரும் மீட்புப் பணிகளையும் ஆய்வு செய்ததாக ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் பேஸ்புக் பதிவில் கூறியுள்ள தகவல்களை பாருங்கள்:
செய்தியாளர்களுடன் சந்திப்பு
சுற்றுப் பயணத்தின்போது, அங்கு வந்த செய்தியாளர்களை சந்தித்த போது, "வர்தா புயல் பாதிப்பு ஏற்பட்டு கிட்டதட்ட 72 மணி நேரங்கள் கடந்தும், தமிழக அரசுத் துறை மற்றும் மாநகராட்சி ஆகிய அரசு இயந்திரங்கள் மீட்புப் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருப்பதால், பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளில் தவித்து வருகின்றனர்" என்று தெரிவித்ததாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
அனைத்து கட்சி குழு
"மாநில அரசு நிவாரணத் தொகையாக அறிவித்துள்ள 500 கோடி ரூபாய் என்பது பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட எந்தவிதத்திலும் போதாது என்பதால், உடனடியாக முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசிடம் இருந்து போதிய நிதியுதவியைப் பெறுவதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தேன். மேலும், பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நேர்மையான முறையில் நிவாரண நிதிகள் சென்றடைய வேண்டுமெனில், அரசு அதிகாரிகள், அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து குழுக்களை அமைத்து நிவாரண உதவிகளை முறையாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்" என்றும் ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மாறுபட்ட செய்திகள்
அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து எழுந்து வரும் சந்தேகங்கள் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட போது, "அதனை திராவிட முன்னேற்ற கழகம் அரசியலாக்க விரும்பவில்லை, கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அம்மையார் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பல்வேறு தரப்பினர் தெரிவிக்கும் மாறுபட்ட செய்திகள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கின்றன" என்று ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார்.
உண்மையாகிவிட கூடாது
ஸ்டாலின் மேலும் கூறுகையில், "இதுபற்றி உச்சநீதிமன்றத்தில் கூட வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்தவரின் மருத்துவ சிகிச்சை குறித்து எழுந்துள்ள இந்த சர்ச்சை பற்றி தமிழக அரசு எந்த தன்னிலை விளக்கத்தையும் இதுவரை கொடுக்கவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் உண்மையாக இருந்து விடக் கூடாது என்று தான் விரும்புகிறேன். அதே நேரத்தில், மத்திய அரசின் கீழ் உள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அம்மையார் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துள்ள நிலையில், ஒருவேளை தமிழக அரசு தனது பொறுப்பில் இருந்து தவறும் பட்சத்தில், மத்திய அரசாவது உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பதே எனது கருத்து", என்று பதிலளித்தேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.