நீட் தேர்வை கணினிமயமாக்குவதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை கணினிமயமாக்குவதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை கணினி மயமாக்குவதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய தேர்வு முகமை எனும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி தான், இனிமேல் நீட் தேர்வுளை நடத்தும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய பாஜக அரசு, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான குழப்பத்தை ஏற்படுத்தி, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைத் தகர்த்துத் தரைமட்டமாக்கி வருவதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் தனது அறிக்கையில், "நீட் தேர்வு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் இருக்கும் போதே, அவசர அவசரமாக நீட் தேர்வைப் புகுத்தி தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்துடன் எவ்வித பொறுப்பும் இன்றி ஆபத்தான விளையாட்டை அரங்கேற்றியது மத்திய அரசு. மாநிலப் பாடங்களில் படித்த மாணவர்களுக்கு மத்திய பாடங்களில் கேள்விகளைத் திணித்து ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு கேள்வித்தாளை வடிவமைத்து தமிழ்நாட்டு மாணவர்களை- குறிப்பாக நகர்ப்புற ஏழை மாணவர்களையும் கிராமப்புற மாணவர்களையும் மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கியது மத்திய பாஜக அரசு என்று குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த நீட் தேர்வின்போது, தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்தது பற்றி குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், "நீட் தேர்வை நடத்திய சி.பி.எஸ்.இ அமைப்போ தேர்வு மையங்களை வெளி மாநிலங்களில் ஒதுக்கி, தமிழ்நாட்டு மாணவர்களை தாங்க முடியாத துயரத்தில் தள்ளியது மட்டுமின்றி தேர்வு மையங்களில் சோதனை என்ற பெயரில் மாணவிகள் மற்றும் மாணவர்களின் மனித உரிமைகளை ஈவு இரக்கமின்றி அப்பட்டமாக மீறியது என்றும் நீட் தேர்வுக்குரிய தமிழ் கேள்வித்தாளை மொழி பெயர்ப்பதில் பிழைகளை ஏற்படுத்தி, தமிழ்நாட்டு மாணவர்கள் எல்லாம் டாக்டர் படிப்பில் சேர முடியாத அநீதியான அவல நிலைமையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கணினி மயமான தேர்வை அறிமுகப்படுத்துவது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுத்திடக் கூடும் என்று தெரிந்தே, அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில், நீட் தேர்வு துவங்கியதிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு புது யுக்தி என்ற பெயரில் தந்திரத்தை கடைப்பிடித்து கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தைச் சீர்குலைத்து வருகிறது மத்திய பாஜக அரசு. கிராமப்புற மாணவர்கள்- அதிலும் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் கணினியே இல்லாத குடும்பங்களில் வாழ்பவர்கள். அது மட்டுமின்றி கணினிப் பயிற்சி ஏதும் பெரிய அளவில் இல்லாதவர்கள். இதுபோன்ற இயலாமை நிறைந்த சூழ்நிலையில், கிராமப்புற மாணவர்கள் எப்படி கணினி மூலம் தேர்வு எழுத முடியும் என்ற அடிப்படை சிந்தனை கூட மத்திய பாஜக அரசுக்கு வராதது மிகுந்த வேதனையளிக்கிறது. மருத்துவப் பட்டம் பெறுவது கிராமப்புற மாணவனுக்கு நிரந்தரமாக எட்டாக் கனியாகவே இருந்து விட வேண்டும் என்ற சதி ஆலோசனை நிறைந்த உள்நோக்கத்தின் விளைவுதான் இந்த கணினி மூலம் நீட் தேர்வு என்ற மோசமான அறிவிப்பாகும்.
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஏழரைக் கோடி மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரிடம் அனுமதி பெறாமல் அலட்சிய மனப்பான்மையுடன் கிடப்பில் போட்டு வைத்து விட்டு, இப்படி ஆண்டுக்கு ஒரு குழப்பத்தை நீட் தேர்வில் புகுத்திவரும் மத்திய பா.ஜ.க. அரசு கிராமப்புற மாணவர்களுக்கும், சமூக நீதிக் கொள்கைக்கும் முற்றிலும் எதிராகவே தொடர்ந்து செயல்படுகிறது.
பாஜகவிற்கு வாக்களித்தவர்களில் கிராமப்புற இளைஞர்களும் அடங்குவர் என்பதை அப்படியே மறந்து விட்டு, அவர்களின் எதிர்கால வாழ்க்கைக் கனவுகளோடு அறநெறிகளுக்கெல்லாம் மாறாக சமன்பாடற்ற ஒரு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு என்பது மிகுந்த கவலைக்குரியது.
ஆகவே, அனைவருக்கும் சமவாய்ப்பு என்பதைக் கருத்தில் கொண்டு, கணினி மூலம் நீட் தேர்வு என்பதை மத்திய பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை உடனே பெற்றுத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த அறிக்கையில், வளர்ச்சி முழக்கத்தை வெகுளித்தனமாக நம்பி ஏமாந்து வாக்களித்து விட்டார்கள் மக்கள் என்பதை மூலதனமாக்கி, கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கையுடன் நீட் தேர்வை வைத்து சித்து விளையாடி, அவர்களின் மருத்துவக் கனவையும், சமூக நீதியையும் அரக்க மனப்பான்மையுடன் சீர்குலைக்கும் மத்திய பாஜக அரசுக்கு, மாணவர்கள் தக்க நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.