சென்னையில் சின்னதாக ஒரு மழை!
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்த நிலையில் சென்னையில் இன்று பரவலாக மழை பெய்தது.
சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக லேசான மழை பெய்தது. முன்னதாக காலை முதல் லேசான காற்று வீசி வந்தது. வானம் இருட்டியபடியே இருந்தது. இடையில் சற்று வெயிலும் வந்து போயிருந்தது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நிலை கொண்டுள்ளது. இது குறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புண்டு. இன்று முதல் 3 நாட்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் தெளிவாகக் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில், அதிகாலை நேரங்களில் மூடுபனி காணப்படும். வங்காள விரிகுடா கடல் பகுதியிலிருந்து, நிலம் நோக்கி வரும் காற்றின் மேலடுக்கில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியும், மாலத்தீவு முதல் லட்சத் தீவு வரையிலான பகுதியில் காற்றின் மேலடுக்குச் சுழற்சியும் காணப்படுகிறது.
இதன் காரணமாகவே, தமிழகம், புதுச்சேரியில் அடுத்து வரும் 3 நாள்களுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தனர். இந்த நிலையில் இன்று மாலையில் லேசான மழையை சென்னை சந்தித்துள்ளது. கடந்த நவம்பர் - டிசம்பர் மாத புயல் மழைக்குப் பின்னர் இப்போதுதான் சென்னையில் மழை பெய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.