கட்டி முடித்தும் திறக்கத் தாமதம்.. ட்ராபிக் நெருக்கடியால் பொதுமக்களே திறந்த போரூர் பாலம்
போரூரில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் உள்ள மேம்பாலத்தை பொதுமக்களே திறந்து வாகனப் பயணம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: கன மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, கட்டுமானப்பணிகள் முடிந்து திறக்கப்படாமல் இருக்கும் போரூர் பாலத்தை பொது மக்கள் திறந்து பயன்படுத்தியதால் பரபரப்பு நிலவியது.
போரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட நாட்களாக போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. காலை, மாலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக போரூர் சந்திப்பில் பாலம் கட்ட தி.மு.க. ஆட்சியின் போது கடந்த 2010ம் ஆண்டு திட்டம் தீட்டப்பட்டது. ரூ.34 கோடியில் 7 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடந்தது. தற்போது மேம்பால பணிகள் அனைத்தும் முடிந்துள்ளன.
இந்த நிலையில் நேற்று சென்னையில் மழை பெய்தது. போரூர் பகுதிகளிலும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் போரூர் சிக்னலிலும், புதிய மேம்பாலம் அருகிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனால் கார்-மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். திறப்பு விழா நடைபெறாததால் பாலத்தின் மேலே வாகனங்கள் சென்று விடாதபடி போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். கடும் நெரிசலில் சிக்கிய பொது மக்கள் அந்த தடுப்புகளை அகற்றி பாலத்தை திறந்தனர்.
பாலத்தில் கிண்டி நோக்கி செல்லும் பாதை திறக்கப்பட்டது. அதில் வாகனங்கள் ஒளி வெள்ளத்தை பீய்ச்சியபடி சென்றன. நேற்று இரவு 7 மணி அளவில் திறக்கப்பட்ட இந்த பாலத்தில் 9 மணி வரையில் வாகனங்கள் சென்றன.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று அவசரம் அவசரமாக தடுப்புகளை அமைத்து பாலத்தை மூடினார்கள்.












Click it and Unblock the Notifications