கலக்குது கமல் எபக்ட்: எண்ணூரில் தூர்வார களமிறங்கிய டைஃபி மாணவர்கள்!
நடிகர் கமலின் எண்ணூர் வருகையை முன்னிட்டு அனைவரின் கவனமும் இந்தப் பிரச்னை நோக்கி திரும்பியுள்ளதால், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தூர்வாரும் பணியில் இறங்கியுள்ளனர்.
சென்னை : சென்னை எண்ணூர் கழிமுகப் பகுதியில் கொசஸ்தலை ஆற்று நீர் கடலில் கலக்கும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இறங்கியுள்ளனர்.
வடசென்னையில் எண்ணூர் கழிமுகப் பகுதியில் அனல்மின்நிலைய கழிவுகள் கொட்டப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக நீண்ட காலமாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் போராடி வருகின்றனர். இந்தப் பிரச்னை குறித்து திமுகவின் கனிமொழி ராஜ்ய சபாவில் குரல் எழுப்பியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அந்தப் பகுதியில் பார்வையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் வடசென்னைக்கு ஆபத்து என்று டுவீட்டியதோடு நேரில் சென்று எண்ணூர் கழிமுகப் பகுதியைப் பார்வையிட்டார். இதனையடுத்து தமிழக மக்களின் பார்வை இந்தப் பகுதியின் மீது விழுந்துள்ளதாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கருதுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி இதுதொடர்பாக அவசரமாக அறிக்கை விட்டார். அதற்கு கமல் பாராட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் கமலின் வருகை எதிரொலியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் எண்ணூர் கழிமுகப் பகுதியில் தூர்வாரும் பணியில் இறங்கியுள்ளனர். சுமார் 100 மாணவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் அமைப்பால் மட்டுமே இதனை செய்துவிட முடியாது என்றாலும், ஒரு தொடக்கமாக இருக்கட்டும் என்ற ரீதியிலேயே தூர்வாரும் பணியைத் தொடங்கியுள்ளதாக மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதி மீனவர்கள், இளைஞர்கள் உதவியுடன் மாணவர் அமைப்பினர் தூர்வாரும் பணியில் இறங்கியுள்ளனர். நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு தூர்வாரும் பணியைத் தொடங்காத நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.