இந்திரா, ராஜீவ் தபால் தலைகளை வெளியிடாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்... ஈ.வி.கே.எஸ். எச்சரிக்கை
கோவை : இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி தபால் தலைகளை மீண்டும் வெளியிடாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி தபால் தலைகளை நிறுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...
தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக வந்து ஆட்சி அமைப்பதே காங்கிரஸ் கட்சியின் திட்டமாகும். இருப்பினும், தேர்தல் நேரத்தில் மேலிட உத்தரவுப்படி முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தில் கூட்டணி என்றால் முழுமையான மது விலக்கு, ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. முதல் மேல் நிலைப்படிப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும் உள்ளிட்ட காங்கிரசின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி வைப்போம்.
இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி தபால் தலைகளை வெளியிடாவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமடையும்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.