ஜெ.சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்கு பதிவு
ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.
இரு மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்ற நிலையில் அவரது சிகிச்சை பெறும் வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் ஏதும் வெளியாகவில்லை. மாறாக ஆளுநர், எதிர்க்கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்ற போதும் ஜெயலலிதாவை பார்க்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் அவர் 75 நாட்களுக்கு பிறகு, உயிரிழந்துவிட்ட நிலையில் அவரது மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதுதொடர்பாக விசாரணை நடத்தவும் ஆறுமுகசாமி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகருக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல், ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. தேர்தல் நேரத்தில் மக்கள் மனதை பாதிக்கும் வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது 126 (1பி) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய தேர்தல் அதிகாரி பிரவீன் நாயருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.