எழும்பூர் தொகுதியில் மீண்டும் களமிறங்கும் பரிதி இளம்வழுதி!
சென்னை: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் திமுகவிலிருந்து அதிமுகவிற்கு இடம் பெயர்ந்தவரான பரிதி இளம்வழுதிக்கு எழும்பூர் (தனி) தொகுதியில் வாய்ப்பு வழங்கியுள்ளார் ஜெயலலிதா.
ஒருகாலத்தில் திமுகவின் சென்னை மண்டல தளபதிகளில் அசைக்க முடியாத இடம் பெற்றிருந்தவர் பரிதி. வழிவழியாக திமுவின் புகழ் பாடிய குடும்பப் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்.
இந்நிலையில் திமுகவில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் பரிதியின் இடத்தையும் அசைக்க ஆரம்பித்தது. இதனால் மனமுடைந்த பரிதி அதிரடியாக விலகி அதிமுகவில் இணைந்தார்.
அடேங்கப்பா 6 முறை:
6 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பரிதி. சட்டசபை துணை சபாயநாகராக இருந்துள்ளார். செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
25 வயதிலேயே:
1984 ஆம் ஆண்டு முதல் 2011 வரை திமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் பரிதி. 25 வயதில் அதிமுகவின் சத்தியவாணி முத்துவை வீழ்த்தி சட்டசபைக்குள் நுழைந்து சாதனை படைத்தவர்.
தேமுதிகாவால் பறிபோன வெற்றி:
அப்போது பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டின் சட்டசபைத் தேர்தலில் பரிதி எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி, அதிமுக கூட்டணி பலத்தால் பரிதியை வீழ்த்தினார்.
சின்ன கேப்பில் ஜெயித்தார்:
அதற்கு முந்தைய தேர்தலில் அதிமுகவின் சார்பில் நிறுத்தப்பட்ட ஜான் பாண்டியனுடன் மோதி கடும் இழுபறி, கலாட்டாவுக்குப் பின்னர் மயிரிழையில் தப்பி ஜெயித்தார் பரிதி.
முற்றிய பூசல்:
இந்த நிலையில்தான் திமுக கட்சித் தலைமைக்கும் பரிதிக்கும் இடையே அதிருப்தி ஏற்பட்டு, பூசல் வெடித்து கட்சியை விட்டு வெளியேறினார் பரிதி. 2013 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி அதிமுகவில் இணைந்தார் பரிதி. கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
மறுபடி எழும்பூரில் மறுவாழ்வு:
இந்நிலையில் தற்போது அவருடைய கோட்டையாக கருதப்படும் எழும்பூர் தொகுதியே அதிமுக கூட்டணியில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.