யாரும் ஜெ.வின் கொடும்பாவியை எரிக்கக் கூடாது: தொண்டர்களுக்கு இளங்கோவன் உத்தரவு
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரிக்கக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்தை கண்டித்து
அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அவர்கள் இளங்கோவனின் உருவப்படத்தை செருப்பு, துடைப்பத்தால் அடித்தும் போராடினர்.
இந்நிலையில் இது குறித்து இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வன்முறையை கையில் எடுப்பது தவறான விஷயம். எங்களுக்கு வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதில் உடன்பாடு இல்லை. ஆனால் அவர்களை வன்முறையை கையில் எடுத்துள்ளதால் எங்களுக்கு வேறு வழி இல்லை. அதனால் நாங்கள் அவர்களைப் போன்று போராட வேண்டி உள்ளது.
சத்தியமூர்த்தி பவனில் நடந்த தாக்குதல் பற்றி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது உடனே நடந்த போராட்டம் போன்று இல்லை. ஏற்கனவே நன்கு திட்டமிட்டு அரசால் நடத்தப்பட்டது போன்று தெரிகிறது.
இதை எல்லாம் பார்த்து நானும், என் குடும்பத்தாரும் பயப்படவில்லை. என் குடும்பம் கடந்த 125 ஆண்டுகளாக அரசியலில் உள்ளது. என் பாதுகாப்பிற்காக போலீசார் உள்ளனர். ஆனால் எனக்கு பாதுகாப்பு என் தொண்டர்களே.
ஜெயலலிதாவின் உருவ பொம்மையை யாரும் எரிக்கக் கூடாது என்று தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.