தேர்தல் நடத்தை விதி மீறல்னா என்ன தெரியுமா..?
சென்னை: வரும் ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி மே 12-ந் தேதி வரை நாடு முழுவதும் 9 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.இன்று தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதையடுத்து இன்று முதலே தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல் படுத்தப் பட்டுள்ளன.
15வது லோக்சபாவின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து, 16வது லோக்சபாவை அமைப்பதற்கான தேர்தல் தேதி இன்று டெல்லியில் அறிவிக்கப் பட்டது. இத் தேர்தல் ஒன்பது கட்டங்களாக இத்தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையர் சம்பத் இன்று அதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. மே 16-ந் தேதி ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் இன்று முதலே அமலுக்கு வருகின்றன.
அதன்படி, எவையெல்லாம் தேர்தல் விதிமுறைகள் என்பது பற்றி ஒரு தொகுப்பு...
புதிய திட்டங்கள் அறிவிப்பு கூடாது...
தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதையடுத்து மாநில அரசோ அல்லது மத்திய அரசோ புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் அது வாக்காளர்களைக் கவரும் முயற்சியாகக் கொள்ளப்படும்.
அமலிலுள்ள திட்டங்கள் ஓகே...
அதேபோல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லோ, பொதுமக்களுக்கு நிதியோ அளிக்கக்கூடாது. புதிய திட்டங்களுக்கும், ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்களுக்கும் தடை பொருந்தும்.
நலத்திட்டங்களுக்குத் தடை...
நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக்கூடாது. திட்டப் பணிகள் முடியும் தருவாயில் இருந்தால் அந்த பணிகளை மேற்கொள்ளலாம். அதில் தடையேதும் இல்லை. நலத்திட்டங்கள் தொடர்பாக எந்த ஆய்வுப் பணிகளையும் மேற்கொள்ள கூடாது.
இடமாற்றம் கூடாது...
அரசாங்க ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு இடமாற்றமோ அல்லது பதவியுயர்வோ வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் தேர்தல் ஆணைய ஒப்புதல் பெற்று செயல் படுத்தலாம்.
வாக்கு சேகரிக்கக் கூடாது...
அரசு விழாக்களில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தனது கட்சிக்காக வாக்குக் கோரக் கூடாது. அவ்வாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டால் அது தேர்தல் நடத்தை விதி மீறலாகக் கொள்ளப் படும்.
பேதம் கூடாது...
பொது மைதானங்களில் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்க கட்சிகளுக்கு இடையே பேதம் பார்க்கப் படக் கூடாது.
அரசு வாகனங்கள்...
அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. பொது மைதானங்கள், ஹெலிபேட் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிப்பதில் கட்சி பேதம் பார்க்கக் கூடாது.
அமைச்சர்கள் அனுமதியில்லை...
வாக்குச்சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதியில்லை. வேட்பாளராகவோ, வாக்காளராகவோ அல்லது கட்சியின் அதிகாரப்பூர்வ ஏஜெண்டாகவோ இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட அந்த இடங்களுக்கு அமைச்சர்கள் செல்லலாம்.
வழிப்பாட்டுத் தலங்களில் பிரச்சாரம் தடை...
சாதி, மத, மொழி மற்றும் இன ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்யக் கூடாது. அதேபோல், கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது.
சொந்த வாழ்க்கை விமர்சனம் கூடாது...
மற்ற கட்சிகளை கொள்கை, செயல் திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள் அடிப்படையில் விமர்சிக்கலாமே தவிர, தனி நபர்களின் சொந்த வாழ்க்கை குறித்த விமர்சனம் கூடாது.
தனியார் இடங்களில் பிரச்சாரம்...
மற்ற கட்சிகளின் பிரச்சார கூட்டங்களில் குழப்பம் விளைவிக்கக் கூடாது. அனுமதி பெறாமல் தனியார் இடங்களைப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது.
விளம்பர அனுமதி...
தொலைக்காட்சி, கேபிள் நெட்வொர்க், ரேடியோ போன்றவற்றில் பிரச்சார விளம்பரங்களை வெளியிட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 3 நாட்களுக்கு முன்னதாகவே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
பணம் கொடுக்கக் கூடாது...
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, வாக்குச்சாவடிக்குச் செல்ல போக்குவரத்து வசதி செய்து தருவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. மீறிப் பணம் கொடுத்தாலோ அல்லது பெற்றாலோ ஓராண்டு சிறை தண்டனை என அறிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கிப் பரிவர்த்தனைகள்...
அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் செலவுகளை வங்கி பரிவர்த்தனையாகவே மேற்கொள்ள வேண்டும்' என்பன போன்றவை தேர்தல் நடத்தை விதிகளில் அடங்கும். இந்த விதிகளை மீறுபவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு தொடரப்படும்.