தேர்தல் விதி மீறல்... பிரியாணி வழங்கிய அதிமுக, கட்சி அலுவலகம் திறந்த திருமா மீது வழக்கு
தூத்துக்குடி: கோவில்பட்டியில் அனுமதி பெறாமல் கட்சி அலுவலகம் திறந்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட 6 பேர் மீது தேர்தல் பறக்கும் படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் மே மாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்தது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அனுமதியின்றி கட்சி அலுவலகம் திறந்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது புகார் எழுந்தது. இதையடுத்து திருமாவளவன் உள்பட 6 பேர் மீது தேர்தல் நடத்தை விதியின் கீழ் தேர்தல் பறக்கும் படையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் மேலூர் மேலூர் ஊராட்சிக்கு உள்பட்ட உட்லாண்ட்ஸ் பகுதி மக்களுக்கு திங்கள்கிழமை அதிமுகவினர் பிரியாணி பொட்டலம் வழங்கியதாக புகார் கூறப்பட்டது.
இது குறித்து திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சியினர், குன்னூர் தேர்தல் அதிகாரிகளுக்குத் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் அதிகாரிகள், விசாரணை நடத்தினர்.
அப்போது தேர்தல் விதிகளை மீறி பொதுமக்களுக்கு பிரியாணி பொட்டலம் வழங்கியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் உட்லாண்ட்ஸ் அதிமுக கிளைச் செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது கொலக்கம்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications