கீழடி வரலாற்றை தேடி ஓடிய பொறியல் மாணவர்கள்.. ஒரு வரலாற்று சுற்றுலா!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் - தொல்லியல் பிரிவின் ஒரு நிகழ்வாக, மதுரை வைகை நதி நாகரீகத்தில் புதைந்து, தற்பொழுது அகழாய்வின் மூலம் வெளிவந்திருக்கும் பண்டைய மேம்பட்ட நாகரீகத்தில் மக்கள் வாழ்ந்த - கீழடி நோக்கி ஒருநாள் தொல்லியல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.
பண்டைய நாகரீகத்தில் உள்ள சிறப்பான விஷயங்களை தெரிந்து கொண்டால்தான், இன்றைய தொழில்நுட்ப உலகில் அதனை மேலும் மேம்படுத்த முடியும் என்பதை நன்கு உணர்ந்த எஸ்கேபி பொறியியல் கல்லூரி நிர்வாகம், தங்கள் மாணவர்களுக்கு கல்வி சுற்றுலாவின் ஒரு அங்கமாக, இந்த வரலாற்று சுற்றுலாவில் தங்கள் மாணவர்களும் பங்கு கொண்டு பயன்பெற வேண்டும் என்று ஆர்வம் காட்டியது.
இதில் எஸ்கேபி கல்லூரியின் கட்டிடக் கலை பிரிவு மாணவர்கள் மற்றும் மற்ற துறையில் ஆர்வமுடைய மற்றவர்களும் சேர்த்து 60 மாணவர்களும் , திருவண்ணாமலை நகரில் உள்ள ஆர்வலர்கள் 25 பேரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கீழடியின் பின்னணி குறித்தும், அங்கே அகழ்ந்து எடுக்கபட்ட 2400 வருடங்கள் பழமையான பொருட்கள் பற்றியும் விரிவாக வீரராகவன் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவின் உதவி கண்காணிப்பாளர் அவர்கள் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். மேலும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் பிராமி பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், செம்பு பொருட்கள், டெரகோட்டா எனப்படும் சுடுமண் பொம்மைகள் என ஏராளமான பொருட்களை பற்றி மாணவர்களுக்கு விளக்கினார்.
மேலும் அகழாய்வுப் பிரிவின் கட்டிடகலை துறையை சேர்ந்த வசந்த், அகழாய்வு செய்த பகுதியில் கிடைத்துள்ள பண்டைய கட்டிடங்களின் அடித்தளங்கள் பற்றியும், உறை கிணறு, வடிகால் அமைப்பு பற்றியும் விளக்கம் அளித்தார்.
மேலும் தென்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் குடவறைகளை நேரில் கண்டு அதன் தொடக்கம் முதல் ,வெவ்வேறு காலகட்டத்தில் அடைந்த மாற்றம் குறித்த வரலாற்று விளக்கத்தை மாணவர்களும், ஆர்வலர்களும் கேட்டு தெரிந்து கொண்டனர்.
இத்தொல்லியல் சுற்றுலாவை திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் நீலகண்டன் ஒருங்கிணைத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். வரலாற்றில் முதல்முறையாக "ஒரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் தொல்லியல் சுற்றுலா செல்வது" மிக ஆரோக்கியமான விஷயம் என்றும், அதற்கு எஸ்கேபி கல்லூரி நிர்வாகத்திற்கு தங்களது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.
தற்சமயம் வரலாற்றின் மீது மாணவர்களும், ஆர்வலர்களும் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதால், இனி வரும் காலங்களில் மாதம் ஒரு முறை திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய தொல்லியல் சார்ந்த இடங்களுக்கு தொல்லியல் சுற்றுலா ஏற்பாடு செய்ய திட்டம் வைத்துள்ளதாக தெரிவித்தனர்.