நான் பேச மாட்டேன், மவுன விரதம்.. வாயைத் திறந்து செய்தியாளர்களிடம் கூறிய இளங்கோவன்!
கரூர்: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை நான் பேச மாட்டேன். மவுன விரதம் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த இளங்கோவனுக்கு இப்போது நேரம் சரியில்லை. சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த மிகப் பெரிய வீழ்ச்சியைத் தொடர்ந்து அவர் தனது தலைவர் பதவியை விட்டு விலகி விட்டார். அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பில் கட்சியினர் உள்ளனர். இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் முக்கியத் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கரூர் வந்த இளங்கோவன் அங்கு கட்சிப் பிரமுகர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாக பல கேள்விகளைக் கேட்டனர். ஆனால் எதற்குமே பதிலளிக்காமல் வெறுமனே சிரித்தபடி நின்றிருந்த இளங்கோவன், புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை நான் யாரிடமும் பேச மாட்டேன். மவுன விரதம் கடைப்பிடிக்கிறேன் என்று மட்டும் கூறி விட்டு போய் விட்டார்.