அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும்: மாஜி எம்.பி., போர்க்கொடி
அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: சசிகலா கட்சியின் பொதுச்செயலாளரே அல்ல எனவும் அவரை பொதுச்செயலாளராக நியமித்திருப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதாகவும் அதிமுக முன்னாள் எம்.பி.கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலா கட்சியை கைப்பற்றினார். தற்போது சட்டசபைக் குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் முதல்வராக பதவியேற்க காய் நகர்த்தி வருகிறார்.
இதற்கு பொது மக்கள், அதிமுக தொண்டர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முதல்வர் பன்னீர்செல்வம் சசிகலா மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இருப்பினும் ஆட்சியை கைப்பற்றுவதில் சசிகலா கோஷ்டி மும்முரமாக இருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்செங்கோடு முன்னாள் எம்.பி. பழனிச்சாமி, சசிகலா கட்சியின் பொதுச்செயலாளரே அல்ல எனவும் அவரை பொதுச்செயலாளராக நியமித்திருப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
முதல்வர் பன்னீர்செல்வத்தை நீக்கும் அதிகாரம் சசிகலாவுக்கு இல்லை எனவும் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அறிவிப்பை வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வுக்கு பின்னர் அ.தி.மு.க கட்சி, தலைமை அலுவலகம், போயஸ் கார்டன் இல்லம் ஆகியவற்றை தொண்டர்கள் கைப்பற்றுவார்கள் எனவும் பழனிச்சாமி கூறியுள்ளார்.