'அம்மா'வின் விசுவாசி தம்பித்துரை கரூரின் கவலைகளைக் கவனிப்பாரா?
கரூர்: தனது விசுவாசத்தாலும், சுறுசுறுப்பான செயல்பாட்டாலும் முதல்வரின் ஜெயலலிதாவிடம் எப்போதும் நற்பெயருடன் திகழும் தம்பித்துரை, லோக்சபா துணை சபாநாயகராகியுள்ளது அவரது கரூர் தொகுதியில் பெரும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் தம்பித்துரையின் புதிய உயர்வு, தங்களது தொகுதிக்கு பெருமளவில் பயன்பட வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை தம்பித்துரை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ஐந்து முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரான தம்பித்துரை ஒரு முறை மட்டுமே அவர் பிறந்த தர்மபுரி தொகுதியின் எம்.பியாக இருந்துள்ளார். மற்ற நான்கு முறையும் அவர் கரூர் எம்.பியாகவே வலம் வந்துள்ளார் என்பதால் கரூர் மக்களின் செல்லப் பிள்ளையாகவே தம்பித்துரை இருக்கிறார்.
விசுவாசத்திற்குக் கிடைத்த பரிசு
தம்பித்துரையின் தேர்வு குறித்து அதிமுகவினர் கூறுகையில், அம்மாவிடம் உண்மையான விசுவாசத்தோடு நடந்து வருபவர் தம்பித்துரை. அதற்குக் கிடைத்துள்ள பரிசுதான் இது. அம்மா எப்போதும் உண்மையான விசுவாசத்திற்கு மதிப்பு கொடுக்கத் தவறியதில்லை. இப்போது தம்பித்துரைக்கும் அவர் உரிய பரிசைக் கொடுத்துள்ளார் என்கிறார்கள்.
ராஜீவ் பிரதமராக இருந்தபோது
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது 1985ம் ஆண்டு முதல் 89 வரை லோக்சபா துணை சபாநாயகராக தம்பித்துரை பதவி வகித்துள்ளார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், அதாவது வாஜ்பாய் ஆட்சியில், அமைச்சராகவும் இருந்துள்ளார்.
84ல் தர்மபுரியிலிருந்து
1984ம் ஆண்டு தர்மபுரி தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்வு செய்யப்பட்டவர் தம்பித்துரை. அதன் பின்னர் கரூருக்கு மாறிய அவர் அங்கு நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார்.
எதிர்பார்ப்புகள் அதிகம்
தம்பித்துரையிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள் கரூர் மக்கள். குறிப்பாக ஜவுளி ஏற்றுமதியாளர்கள்தான் அதிக கோரிக்கைகளுடன் தம்பித்துரையின் தயவை எதிர்நோக்கியுள்ளனர். தீர்க்கப்படாத பல தொழில் பிரச்சினைகளை தம்பித்துரை தீர்க்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சாயக் கழிவு பிரச்சினை
கரூரில் மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பது சாயப்பட்டறைக் கழிவு பிரச்சினைதான். தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால் அங்கு 450க்கும் மேற்பட்ட சாயப் பட்டறைகளை அரசு இழுத்து மூடி விட்டது. இதுதொடர்பாக சாயப் பட்டறை அதிபர்கள் சுமூகத் தீர்வு காண தம்பித்துரை உதவியை எதிர்நோக்கியுள்ளனர்.
2 லட்சம் பேருக்கு வேலை
இதுகுறித்து தேசிய மகளிர் காங்கிரஸ் செயலாளரும், கரூரில் தம்பித்துரையை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றவருமான ஜோதிமணி கூறுகையில், கரூரில் ஜவுளித்துறையில் மட்டும் 2 லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஆனால் இவர்களின் பிரச்சினைகளுக்கு கடந்த 10 வருடமாகவே நிரந்தரத் தீர்வு காணப்படாமல் உள்ளது.
நசிந்து போன சாயத் தொழில்
இப்படியே நிலைமை நீடிப்பதால் இவர்கள் அருகாமை மாவட்டங்களுக்கு வேலைக்குப் போகும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். எத்தனை காலத்திற்குத்தான் இப்படி அவர்கள் போய் வர முடியும். இப்போது தம்பித்துரை லோக்சபா துணை சபாநாயகராகியுள்ளதால், இந்தப் பிரச்சினைக்கு எளிதாக தீர்வு காண முடியும். அதை அவர் செய்ய வேண்டும் என்பதே இங்குள்ள ஜவுளித்துறையினரின் முக்கியக் கோரிக்கை என்றார்.
கரூரின் கவலையைக் கவனிப்பாரா தம்பித்துரை?