நீங்க சொத்து குவிக்கலாம், நாங்க 10 ரூபா 'எக்ஸ்ட்ரா' வாங்க கூடாதோ? ஆட்டோ டிரைவரின் அலம்பல்
சென்னை: ஆட்டோவின் பின்புறத்தில் பிரசவத்திற்கு இலவசம் என்றோ, காதல் தோல்வி தத்துவங்களையோ எழுதி வைத்திருப்பதை பார்த்திருப்போம். சென்னையில் ஒரு ஆட்டோவின் பின்புறத்தில் எழுதப்பட்ட இந்த வாசகத்தை பாருங்கள்.. அரசுக்கு எச்சரிக்கைவிடுக்கும் வகையில் உள்ளது.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும், அல்லது அடாவடி செய்து பணம் கேட்கும் ஆட்டோ டிரைவர்களை பிடிக்க தமிழக அரசு சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இயங்கும் ஒரு ஆட்டோவின் பின்புறத்தில் உள்ள வாசகம் இது: "பயணிகளிடம் 10 ரூபாய் கேட்டு பெறும் ஆட்டோக்காரர்கள் திருடர்களும் இல்லை, தீவிரவாதிகளும் கிடையாது. சொத்துக்குவிப்புக்காரனும் கிடையாது" என்று அதில் எழுதப்பட்டுள்ளது. எங்களை பிடிக்க 33 குழுக்கள் எதற்கு என்றும் கேட்டுள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை சுட்டிக் காட்டி தாங்கள் பணம் சம்பாதிப்பதையைும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மறைமுகமாக கூறுகிறது இந்த வாசகம். கோன் எவ்வழியோ குடியும் அவ்வழியே என்ற வாசகம் சும்மாவா வந்தது என்று எண்ணத்தோன்றுகிறது ஆட்டோவாலாக்களை பார்த்தால்.