தமிழக அரசின் சோலார் மின் திட்டம்- நிலம் கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு!!
நெல்லை: தமிழக அரசின் சோலார் மின் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல்லை மாவட்ட டிராக்டர் ஓட்டுனர் மற்றும் அனைத்து தொழிலாளர் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் மாடசாமி தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
அதில், " நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, மேலநீலிதநல்லூர் ஒன்றியம், நடுவங்குறிச்சி, வல்லராமபுரம், அகிலாண்டபுரம், பொய்கைமேடு, குற்றாலப்பேரி, ஆட்கொண்டார்புரம், கேவி ஆலங்குளம் உள்பட பல பகுதிகளில் விளைநிலங்கள் உள்ளன.
தமிழக அரசின் சூரிய ஒளி மின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்த விளைநிலங்களில் வருவாய்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளின் அனுமதியின்றி கையகப்படுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே காற்றாலை மின் திட்டத்துக்கு பாதி நிலங்கள் பறி போய் விட்டது. தற்போது சோலார் மின் திட்டத்துக்காக எஞ்சியுள்ள விவசாய நிலங்களும் பறிபோகும் நிலை உருவாகி வருகிறது. இதன் காரணமாக வேளாண் உற்பத்தி குறைந்து விவசாயிகள் வீதிக்கு வரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே சோலார் மின் திட்டத்திற்கு விளைநிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்" என அதில் குறிப்பிட்டுள்ளனர். இந்த திடீர் முற்றுகையால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.