+2ல் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மகன்... டாக்டர் கனவு பொய்த்ததால் தந்தை தற்கொலை
திருச்சி: திருச்சியில் பிளஸ் டூ தேர்வில் மகன் குறைவான மதிப்பெண்கள் எடுத்தததால், மனமுடைந்த தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சி செங்குளம் காலனியில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தவர் சேகர் (50). பொதுப்பணித்துறை அதிகாரியான சேகரின் மகன் மோகன் சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து பிளஸ் டூ தேர்வெழுதியிருந்தார்.
மகனை மருத்துவராக்கும் கனவில் இருந்துள்ளார் சேகர். இந்நிலையில் நேற்று முன்தினம் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் மோகன் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதனால், மகனையும், மனைவியையும் கண்டித்துள்ளார் சேகர். பின்னர் வீட்டில் தனிமையில் இருந்த சேகர் சோகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.