காழ்ப்புணர்ச்சி காரணமாகவே காப்பகம் மீது அவதூறு... பாலேஸ்வரம் பாதிரியார் குற்றச்சாட்டு!
ஆதரவற்ற முதியோர்களை பராமரிப்பதற்காக வாங்கும் நிதியை பிறருக்கு செலவு செய்யவில்லை என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவதூறு பரப்பப்படுவதாக பாலேஸ்வரம் காப்பக நிர்வாகி பாதிரியார் தாமஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : ஆதரவற்ற முதியோர்களை பராமரிப்பதற்காக வாங்கும் நிதியை பிறருக்கு செலவு செய்யவில்லை என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவதூறு பரப்பப்படுவதாக பாலேஸ்வரம் காப்பக நிர்வாகி பாதிரியார் தாமஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பாலேஸ்வரம் முதியோர் காப்பகத்தில் இறந்த முதியவர்களின் எலும்புகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 3 நாட்களாக கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காப்பக நிர்வாகி பாதிரியார் தாமஸ் சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது : யாரும் செய்யாத ஒரு சேவையை நான் செய்து வருகிறேன். மதுரையில் முதன்முதலில் சாலையில் கிடந்த ஆதரவற்றவரின் நிலையை பார்த்து நானும் என்னுடன் 27 வருடங்கள் ஒன்றாக சேவை செய்த பெண்மணி ஒருவரும் சேர்ந்து தான் இந்த காப்பகத்தை தொடங்கினேம். காப்பகத்தை தொடங்குவதற்காக அந்தப் பெண்மணி 40 ஆயிரம் பவுண்ட்களை என்னிடம் கொடுத்தார்.
போலீஸ் ஒப்புதலுடன்
திண்டுக்கலில் 18 ஆண்டுகள் முன்பு தொடங்கி 18 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம், தற்போதும் அங்கு 325 பேர் உள்ளனர். முதலில் நாங்களாகவே வீதியில் ஆதரவற்று இருந்த முதியோர்களை அழைத்து வந்து காப்பகத்தில் பராமரித்து வந்தோம். கடந்த 8 ஆண்டுகளாக போலீசாரோ, அரசு மருத்துவமனையோ பரிந்துரைக்கும் முதியோர்களை மட்டுமே சட்ட ஒப்புதல்களுடன் சேர்த்துக் கொண்டு பராமரித்து வருகிறோம்.
இறக்கும் தருவாயில் இருக்கும் ஆதரவற்றோர்
இறக்கும் தருவாயில் இருக்கும் ஆதரவற்றோருக்கு நாங்கள் சேவை செய்து வருகிறோம். பாலேஸ்வரத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு ஆளாவது இறந்து கொண்டு இருப்பார்கள். சில நாட்களில் 3, 4 முதியோர் கூட இறந்துவிடுவார்கள். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற விலாசம் வேண்டும், உறவினர்கள் பராமரிப்பு வேண்டும். அப்படி பராமரிக்க முடியாதவர்கள் பற்றி எனக்கு தகவல் தெரிவிப்பார்கள் அவர்களை ஆர்எம்ஓ அனுமதியுடன் காப்பகத்திற்கு அழைத்து வருவோம்.
சுவையான உணவு தந்தோம்
3 வேளை உணவு தந்து அனைவருக்கும் இரவில் ஏதாவது ஒரு மாத்திரையும் கொடுப்போம். முதியோர்களின் மன திருப்திக்காக வைட்டமின் மாத்திரையையாவது நாங்கள் இரவு வேளையில் கொடுப்பது வழக்கம்.
பிறரிடம் நிதியுதவி
எங்களிடம் இருந்த ஆதரவற்றோர்களை பராமரிப்பதற்கு சகிப்புத் தன்மை தேவை. இவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து தர நன்கொடைகள் பெறப்படுகின்றன, 65 சதவீத உதவிகள் இந்தியாவில் இருந்தே கிடைக்கின்றன. தாம்பரத்தில் உள்ள காய்கறி வியாபாரிகள் அன்று விற்பனையாகாத காய்கறிகளை எங்களுக்கு தருவார்கள்.
எதேச்சையான விஷயம்
20ம் தேதி காலையில் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் தாம்பரத்தில் இறந்த முதியவரின் உடலை காய்கறிகளுடன் பாலேஸ்வரம் எடுத்து வந்துள்ளார். இது எதேச்சையாக நடந்தது, அப்போது மூதாட்டி ஒருவரை போலீசார் காப்பகத்திற்கு அனுப்பியதன் பேரில் அவரும் அந்த வாகனத்தில் அழைத்து வரப்பட்ட போது தான், அந்த மூதாட்டி கலாட்டா செய்து பிரச்னையை ஏற்படுத்தியுள்ளார்.
காப்பகம் மீது காழ்ப்புணர்ச்சி
இந்த சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு காப்பகம் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் பிரச்னையை திசை திருப்புகின்றனர். நான் சாலையில் கிடக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்காக பிச்சை எடுத்து சேர்க்கும் காசை மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது என்று கூறியதால் என் காப்பகத்திற்கு எதிரானவர்கள் செய்த சதி தான் இது என்றும் தாமஸ் கூறியுள்ளார்.