ஃபெரா வழக்கு: பெங்களூர் சிறையிலிருந்து காணொலி காட்சியில் ஆஜரானார் சசிகலா- குற்றச்சாட்டு பதிவு
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலா மீது மேலும் ஒரு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலா மீது மேலும் ஒரு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் டிவி.க்கு உபகரணங்கள் வாங்கியதில் மோசடி எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார குற்றவியல் நீதிபதி ஜாகீர் உசேன் முன்னிலையில் இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 1996-97ம் ஆண்டு காலகட்டத்தில் ஜெஜெ டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து ஒளிபரப்பு சாதனங்கள் வாங்கியது தொடர்பாக அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக சசிகலா, அவரது அக்கா மகன் பாஸ்கரன், ஜெஜெ டிவி மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்குகள் எழும்பூர் 1-வது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜாகிர் ஹுசைன் முன்பு நடந்து வருகிறது. 4 வழக்குகளிலும் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து காணொலி காட்சியில் சசிகலா கடந்த ஜூன் 21ஆம் தேதியன்று எழும்பூர் நீதிமன்றத்தில் 3-வது தளத்தில் உள்ள காணொலி காட்சி அறையில் அமைக்கப்பட்ட திரையில் சசிகலா ஆஜரானார்.
அப்போது, இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட பாஸ்கரனும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார், வழக்கறிஞர் அய்யப்பன் ஆகியோரும், அமலாக்கத் துறை சார்பில் வழக்கறிஞர் ரமேஷும் ஆஜராகினர்.
உங்களுக்கு தமிழ் , ஆங்கிலம் இதில் எந்த மொழியில் கேள்விகள் கேட்கலாம் என்று சசிகலாவிடம் நீதிபதி ஜாகிர் ஹுசைன் கேட்டார். அதற்கு சசிகலா தமிழ் என்று பதிலளித்தார். அதையடுத்து சசிகலா, பாஸ்கரனிடம் ஜெஜெ டிவிக்கு உபகரணங்கள் மற்றும் அப்லிங்க் தொடர்பாக அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாகவும், வெளிநாட்டு நிறுவனங்களின் பெயரில் முதலீடு செய்தது தொடர்பாகவும் 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப் பட்டன. அனைத்து கேள்விகளுக்கும் இல்லை, எனக்குத் தெரியாது என்றே சசிகலா பதிலளித்தார்.
மீண்டும் ஜூலை 1ஆம் தேதி காணொலி மூலம் சசிகலா ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் பாஸ்கரனும் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து காணொலி காட்சி மூலம் சசிகலா ஆஜரானார். எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலா மீது மேலும் ஒரு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications