சென்னை சில்க்ஸ் போல் தீப்பற்றி எரிந்த தேனி ஆனந்தம் சில்க்ஸ்!
தேனி: சென்னை சில்க்ஸ் கட்டடம் தீப்பிடித்து எரிந்தது போல் தேனி மாவட்டத்தில் உள்ள ஆனந்தம் சில்க்ஸ் கட்டடத்திலும் தீவிபத்து ஏற்பட்டது.
சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் கடந்த மாதம் 31-ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. இதில் கட்டடம் முழுவதும் சேதமடைந்து தற்போது அதை தரைமட்டாக்கும் பணிகள் நடந்து முடிந்தன.

எனினும் தீவிபத்துகான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தேனி மாவட்டத்தில் உள்ள ஆனந்தம் சில்க்ஸிலும் தீவிபத்து ஏற்பட்டது.
தேனி மாவட்டம் மதுரை சாலையில் அமைந்துள்ளது ஆனந்தம் ஜவுளிக் கடை. இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. கடையில் இருந்து தீ வெளியேறியதை காவலாளி கண்டார். பின்னர் தீயணைப்பு துறைக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தார்.
கடைக்குள் தானியங்கி கதவுகள் அமைக்கப்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் கடைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர்.
கடையின் தரைதளத்தில் உள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து நாசமாகின. தீயை அணைக்கும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்களும், 50-க்கும் மேற்பட்ட வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.
முக்கிய சாலையில் அமைந்துள்ள கடை என்பதால் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.












Click it and Unblock the Notifications