மெரினாவில் உலகை திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு புரட்சி மையம் கொண்டது இதே நாளில்தான்!
உலகை திரும்பி பார்க்க வைத்த மெரினா ஜல்லிக்கட்டு புரட்சி மையம் கொண்டது இன்றுதான்!
சென்னை: தமிழர் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை உடைக்க அறவழியில் லட்சக்கணக்கான மாணவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் அணிதிரண்ட நாள்தான் இன்று.
சங்க இலக்கியங்கள் பேசும் ஏறு தழுவுதல் எனப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்வு என்பது தமிழரின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று. தமிழர் பண்பாட்டு திருவிழாவான பொங்கல் விழாக்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியும் ஒரு அங்கம்.
ஆனால் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக பொய்யான காரணத்தை முன்வைத்து அன்னியர் அமைப்பான பீட்டா உச்சநீதிமன்றம் மூலம் தடை விதித்தது. இந்த தடையை உடைப்பதற்காக அலங்காநல்லூர் வாடிவாசலில் புரட்சி மையம் கொண்டது.
அலங்காநல்லூரில் தொடங்கி
அலங்காநல்லூரைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்த புரட்சி மெல்ல மெல்ல விரிவடைந்தது. மதுரை, திருச்சி, கோவை, சேலம் என அத்தனை நகரங்களும் போர்க்கோலம் பூண்டன.
விடிய விடிய போராட்டம்
இதன் உச்சமாக சென்னை மெரினா கடற்கரையில் சில நூறு இளைஞர்கள் முதலில் ஒன்று திரண்டனர். பின்னர் மெல்ல மெல்ல இந்த எண்ணிக்கை பெருந்திரளானது. இரவிலும் அசையாமல் மெரினா மணலிலேயே இளைஞர் பட்டாளம் திரண்டிருந்தது.
குடும்பம் குடும்பமாக
மாணவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த எழுச்சிமிக்க போராட்டம்தான் பல லட்சம் தமிழர்களை ஒரு வாரகாலம் மெரினா கடற்கரையில் அணி திரள வைத்தது. குடும்பம் குடும்பமாக ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் நடந்த புரட்சியில் கை கோர்த்தனர்.
அதிர்ந்தது உலகம்
துளி வன்முறையும் இல்லாமல் உரத்த முழக்கங்களுடன் மெரினாவில் அமைதி அறவழியில் லட்சக்கணக்கானோர் கொட்டும் உறை பனியிலும் குவிய உலகமே அதிர்ந்தது. இப்படியும் ஒரு புரட்சியை முன்னெடுக்க முடியுமா? என அரபு வசந்தங்களை பார்த்த தேசங்கள் அதிர்ந்தன.
மீட்டெடுத்த புரட்சி
இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும் உலக நாடுகளில் மெரினா புரட்சிக்கு ஆதரவாக அறவழிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஒருவார காலம் மெரினாவில் நடந்த இந்த அறவழிப் புரட்சிதான் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு உரிமையை இந்த ஆண்டு நமக்கு மீட்டுக் கொடுத்தது.
ரெட் சல்யூட்!