இதயத்தில் துளை: மாணவிக்கு நவீன சிகிச்சை... அரசு மருத்துவமனை சாதனை
சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் முதன் முறையாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் 17 வயது இளம்பெண்ணிற்கு சிறு துவாரம் மூலம் இதய அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.
திருவாரூர் மாவட்டம், அலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வளர்மதி(17). கூலித்தொழிலாளி மகளான இவர், அலிவலம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ்டூ படித்து வந்தார்.
இதயத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதயத்தில் துளை
மேற்பரிசோதனையில் இவருக்கு இதயத்தில் 5 செ.மீ. அளவில் துளை இருப்பது தெரிந்தது. இதனால் சுத்த ரத்தமும், அசுத்த ரத்தமும் கலந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.
நவீன சிகிச்சை
இதையடுத்து வளர்மதிக்கு சாதாரண பைபாஸ் அறுவை சிகிச்சை முறையைப் பின்பற்றாமல் அவரது வலது மார்பின் கீழ் பகுதியில் 4 செ.மீ. அளவிற்கு ஒரு துளை ஏற்படுத்தி நவீன சிகிச்சை மூலம் கோளாறு சரி செய்யப்பட்டது.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை
இந்த அறுவை சிகிச்சை கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. முதன்முறையாக அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சை முறை பின்பற்றப்பட்டிருப்பதாக இதய அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் ராஜா வெங்கடேஷ், பேராசிரியர் கே.எஸ்.கணேசன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறினர்.
சிறு தழும்புதான்
சிறு துவாரத்தின் மூலம் அறுவை சிகிச்சை செய்வதால் சில நாள்களிலேயே அன்றாடப் பணிகளைத் தொடங்கலாம். பெரிய தழும்புகள் ஏற்படாது, சிறிய தழும்பே காணப்படும். அந்த தழும்பும் மார்புக்கு கீழே மறைந்துவிடும். வலி குறைவாக இருக்கும். நோய்த்தொற்று ஏற்படாது.
இதயம், நுரையீரல் நிறுத்தம்
இந்த அறுவை சிகிச்சையின்போது மாணவியின் இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடு சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. அதன்பின்பு கருவிகளின் துணை கொண்டு மீண்டும் இதயம், நுரையீரல் இயக்கப்பட்டது. சுமார் மூன்றரை மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சையின்போது ரத்த சேதமும் ஏற்படவில்லை.
பெண்களுக்கு இந்த வகையான அறுவை சிகிச்சை உகந்ததாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.