கடலூரில் கலெக்டருடன் மீனவர்கள் வாக்குவாதம்:வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தினால் பரபரப்பு
கருத்து கேட்பு கூட்டத்தில் ஆட்சியருடன் மீனவர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்: கடலூரில் நடைபெற்ற கருத்து கேட்பு குறித்த கூட்டம் ஒன்றில் மாவட்ட ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர்கள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் துறைமுகம் கடலூர் துறைமுகம். தற்போது மீன்பிடி தடை காலம் துவங்கிவிட்டதால், மீன்பிடி படகுகள் அனைத்தும் கடற்கரையில் நிறுத்தப்பட்டு துறைமுகமே வெறிச்சோடி காணப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் சுமார் 50 மீனவ கிராமங்கள் உள்ளன. இதனால் மீனவர்கள் எண்ணிக்கை இந்த மாவட்டத்தில் அதிகமாகவே இருக்கும்.
இந்நிலையில், கடலூரில் கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைபடம் மீதான மக்கள் கருத்து கேட்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் தண்டபாணி தலைமை தாங்கினார்.
ஆனால் இந்த கூட்டத்தில் மீனவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே தென்பட்டனர். காரணம் என்னவென்று விசாரித்தபோது, கருத்து கேட்புக் கூட்டத்தின் விளம்பரமானது ஆங்கில பத்திரிகையில் மட்டும் விளம்பரம் செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் மீனவர்கள் யாருக்கும் கூட்டம் நடக்கும் தகவல் போய் சேரவில்லை எனவும் தெரியவந்தது. இதனால் நூற்றுக்கும் குறைவான மீனவர்களே இதில் கலந்துகொண்டனர்.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் மீனவர்கள், இன்றைய கூட்டம் குறித்த தகவல் சரியானதாக இல்லை என குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.
மேலும் இந்த திட்டத்தில், மீனவ கிராமங்களின் சமூக கூட்டமைப்புகள், மீனவர்களுக்கு நிகழும் பிரச்சினைகளை மனதில் வைத்துக் கொண்டு, உள்ளூர் நிர்வாகம் பயன்படுத்தும் இந்த வரைபடத்தினை சரியாக அமைக்கவில்லை.
எனவே முழுமைபெறாத, வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட கருத்து கேட்பு கூட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வாதிட்டனர். பின்னர், கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள் வெளிநடப்பு செய்ததுடன், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஆட்சியர் முன்னிலையிலேயே மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பும் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.