பிளாஷ்பேக் 2014: 22 பச்சிளம் குழந்தைகளைக் காவு கொண்ட தர்மபுரி, சேலம் அரசு மருத்துவமனைகள்!
தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகிறது. எடை குறைவு, மூச்சிரைப்பு, பிறக்கும் போதே மஞ்சள் காமாலை ஆகிய பாதிப்புள்ள குழந்தைகள், பிறந்த உடனே, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படுகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதம் தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகள் 5 பேர் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து இறந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 8 குழந்தைகள் பலியானது.

இதனால் தமிழக மக்களின் கவனம் தர்மபுரி அரசு மருத்துவமனை பக்கம் திரும்பியது.
விசாரணை தேவை...
தொடர்ந்து சிசுக்கள் இறந்த சம்பவத்தால் மருத்துவமனையில் அளிக்கப் படும் சிகிச்சையில் மக்கள் சந்தேகம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கட்சித் தலைவர்கள் விசாரணை தேவை என அறிக்கை வாயிலாக வலியுறுத்தினர்.
கண்காணிப்பு...
அதனைத் தொடர்ந்து சென்னையை சேர்ந்த குழந்தைகள் மருத்துவ சிறப்பு சிகிச்சை நிபுணர் குமுதா தலைமையில் 9 பேர் மருத்துவக் குழுவும், மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி தலைமையிலான குழுவும் பச்சிளம் குழந்தைகள் வார்டை விடிய விடிய கண்காணித்தது.
சேலம் மருத்துவமனை...
தர்மபுரியில் இந்தப் பிரச்னை ஏற்பட்டதால், அங்கிருந்து அபாய கட்டத்தில் இருந்த குழந்தை கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரு மருத்துவமனைகளிலும் சேர்த்து, 22 குழந்தைகள் உயிரிழந்தனர்.
புதிய சாதனங்கள்...
சரியான வசதிகள் செய்யப்படாததால் நோய்த் தொற்று காரணமாகக் கூட குழந்தைகள் பலி ஆகியிருக்கலாம் என ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து அங்கு 10 ஏசி சாதனங்கள் பொருத்தப்பட்டன.
ஊட்டச்சத்து குறைவு...
கர்ப்பிணிப் பெண்களுக்கு போதிய ஊட்டச்சத்து இல்லாததால், ரத்த சோகையால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், அதனால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் எடை குறைவு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாவதாகவும் கூறப்பட்டது.
சர்ச்சையில் சிக்கிய அன்புமணி...
எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், அறிக்கை எதுவும் தராமல் அமைதி காத்து சர்ச்சையில் சிக்கினார் அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ்.
மதுப்பழக்கம் தான் காரணம்...
பின்னர், நிலைமையை நேரில் அறிய மருத்துவமனைக்கு சென்ற அவர், குழந்தைகள் உயிரிழப்புக்கு முக்கியக் காரணம் இளைஞர்களின் மதுப்பழக்கம் தான் என பரபரப்பு பேட்டியளித்தார்.
சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம்...
இச்சம்பவம் தொடர்பாக தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது தேமுதிக உறுப்பினர் வெங்கடேசன் திமுக உறுப்பினர் செங்குட்டுவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டெல்லிபாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ராமச்சந்திரன், காங்கிரஸ் கட்சியின் பிரின்ஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் கணேஷ்குமார் ஆகியோர் பேசினர்.
அரசு காரணமில்லை...
அதற்குப் பதில் அளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘இந்தக் குழந்தைகளின் இறப்புக்கு எந்தக் கட்டமைப்பு குறைபாடும் காரணம் இல்லை. மருத்துவர்கள் குறைபாடோ, நோய்த்தொற்றோ, உபகரணங்கள் குறைபாடோ, மருத்துவர்கள், செவிலியர்கள் குறைபாடோ இல்லை. மேலும், எந்த வகையிலும் இந்த நிகழ்வுக்கு அரசு காரணமில்லை' எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications