நத்தம் விஸ்வநாதன் போட்டியிடும் தொகுதியில் மாணவர்கள் மூலம் பணப் பட்டுவாடா!
திண்டுக்கல்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிடும் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் கல்லூரி மாணவர்கள் மூலமாக பணப் பட்டுவாடா நடப்பது தெரிய வந்து தேர்தல் அதிகாரிகள் கையும் களவுமாக அவர்களைப் பிடித்தனர்.
கல்லூரி மாணவர்கள் என்பதால் எதிர்காலத்தை மனதில் கொண்டு எச்சரிக்கையுடன் அவர்கள் பின்னர் அதிகாரிகள் விடுவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிடுகிறார். ஜெயிப்பாரா, மாட்டாரா என்ற பெரும் நெருக்கடியில் உள்ளார் விஸ்வநாதன். இந்த நிலையில் தொகுதியில் பணப் பட்டுவாடா படு ஜரூராக நடப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
மேலும் நூதனமான முறையி கல்லூரி மாணவர்கள் மூலமாக பணப் பட்டுவாடா நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், கன்னிவாடி நவாப் பட்டியில் கல்லூரி மாணவர்களான ஜோதிமணி, சங்கர், தங்கம் ஆகிய மூன்று பேரும் பணம் பட்டுவாடா செய்துகொண்டிருந்தபோது, தொகுதியின் பறக்கும் படை அதிகாரி மேகலாதேவி விரைந்து வந்து மாணவர்களை பிடித்தார்.
அவர்கள் பணப் பட்டுவாடா செய்தது உறுதியாகவே, அவர்களை கடுமையாக எச்சரித்தார். மாணவர்கள் என்பதாலும், இந்த தவறை முதல் முறை செய்வதாலும் மன்னிக்கிறேன். மீண்டும் இதை தவறைச் செய்தால், கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்து அவர்களை விடுவித்தார்.