வெளிநாட்டு பண விவகாரம்: உதயகுமார் மீது அரசு இறுகும் பிடி
கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியோடு அணு உலைகளை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் கூடங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் பலர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களை வழி நடத்திச் செல்வது அணு உலை எதிர்ப்பு பேராட்டக் குழு தலைவர் சுப. உதயகுமார் தான்.
உதயகுமாருக்கு ஒஹாயோ பல்கலைக்கழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான அமெரிக்க டாலர்கள் அனுப்பபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. மேலும், இரண்டு வங்கி கணக்குகளில் மட்டும் சுமார் 44 ஆயிரம் டாலர்கள் போடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் இதை உதயகுமார் மறுத்துள்ளார்.
மேலும், இது பல்கலைக்கழகம் தன்னை ஒரு துறையில் ஆராய்ச்சி வல்லுனராக சேர்த்து தான் கட்டுரைகள் அனுப்பியதற்காக கிடைத்த சன்மானமே என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் அரசியல் ரீதியாக உதயகுமார் ஆம் ஆத்மி கட்சியில் உள்ளதாலும், தொண்டு நிறுவனங்கள் மூலம் அவர் பெரும் நிதி பெற்றுள்ளார் என்றும் அரசு தரப்பில் ஆதாரங்களோடு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உதயகுமாரின் அன்றாட நிகழ்வுகளை மத்திய மற்றும் மாநில அரசுகளின் உளவுத்துறை கண்காணித்து வருகின்றதாம். எனவே, விரைவில் உதயகுமார் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை பாயலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
உதயகுமாரை போலீசார் கைது செய்தால் நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கலவரம் வெடிக்கும் என அவரது ஆதரவாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.