ஸ்டெர்லைட்: போலீஸாரை ஓடவைத்து... தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டம் இன்றுடன் 100-ஆவது நாளை எட்டுகிறது.
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேரணி நடத்திய போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த முயன்று முடியாமல் போலீஸார் தப்பி ஓடினர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் குடிநீர் மாசு ஏற்பட்டு விவசாயம் அழியும் தருவாயில் உள்ளது. மேலும் குழந்தைகள் , பெரியவர்கள் உள்ளிட்டோருக்கு மூச்சு திணறல், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது.
இதனால் ஆலையை மூட வேண்டும் என கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி வெளிநாடு வாழ் இந்தியர்களும் தங்களது எதிர்ப்பை காட்ட ஆங்காங்கே போராட்டம் நடத்தினர்.
முழு அடைப்பு
இந்நிலையில் இந்த போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. இதனால் இன்று போராட்டத்தை தீவிரப்படுத்த முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
முற்றுகை
இந்த போராட்டத்துக்கு உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 18 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
144 தடை உத்தரவு
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிராம மக்கள் எந்தவழியில் வந்து முற்றுகையிட்டாலும் கைது செய்ய தூத்துக்குடியில் 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிய பகுதிகளில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
18 கிராமத்தினர்
இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் பிரமாண்ட முற்றுகை பேரணியை நடத்தி வருகின்றனர். இதில் 18 கிராமங்களைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.
புகை குண்டு வீச்சு
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். பதிலுக்கு பொதுமக்களும் போலீஸார் மீது கற்களை வீசினர். இதையடுத்து கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டது. எதற்கு மசியாத மக்கள் போலீஸாரை ஓடவைத்துவிட்டு தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.