அரசு ஊழியர்களின் போராட்டம்: பொதுமக்கள் பாதிப்பு - என்ன செய்கிறது அரசு?
சென்னை: 20 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி அரசு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இரவு பகலாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளனர் ஜாக்டோ அமைப்பினர். கோட்டையை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிடப் போவதாகவும் கூறியுள்ளனர். பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் அரசு பணிகள் முடங்கியுள்ளன.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலி பணியிடங்களை நிரப்புதல், மதிப்பூதியம், தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அரசு ஊழியர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கிய அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆசிரியர் அமைப்புகள், நீதித் துறை, வணிக வரித்துறை ஊழியர் சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளது. பணிக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 12ம்தேதி முதல் மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
அரசு ஊழியர்கள் போராட்டம்
மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டும் மாலையில் விடுவிக்கப்பட்டும் வந்தனர். நாளுக்கு நாள் அரசு ஊழியர்கள் போராட்டம் வலுவடைந்து வருகிறது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
காத்திருப்பு போராட்டம்
அரசு ஊழியர்களின் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. வாகனங்களில் செல்லக்கூடியவர்கள் போக்குவரத்து நெரிசலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் அரசு ஊழியர்கள் தங்களது மறியல் போராட்டத்தை கைவிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விடிய விடிய போராட்டம்
சென்னையில் அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் எழிலகம் அருகில் உள்ள ஆவின் வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர்கள் பட்டாபிராம், டேனியல், ராமசாமி, கலைச்செல்வி ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமையல் செய்து சாப்பிட்டு
போராட்ட பந்தல் அருகே ஊழியர்கள் சமையல் செய்தனர். பெண் ஊழியர்கள் காய்கறிகளை நறுக்கி கொடுத்தனர். ஆண் ஊழியர்கள் சமைத்தனர். தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தும் ஊழியர்கள், அங்கேயே படுத்து உறங்கினர்.
மயங்கி விழுந்த பெண்கள்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள், காத்திருப்பு போராட்டம் நடத்த, அரசு ஊழியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை கண்டித்து, ஆட்சியருக்கு எதிராக கோஷமிட்ட பெண்கள் திடீரென மயங்கி விழுந்தனர்.
ஒப்பாரி வைத்து அழுதனர்
ஏராளமான பெண் ஊழியர்கள் தலையில் முக்காடு போட்டுக்கொண்டும், ஒப்பாரி வைத்து அழுதும் பாட்டுப்பாடியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பல அரசு ஊழியர்கள் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
படுத்துக்கொண்டே கோஷம்
நெல்லையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து, காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், இரவிலும் படுத்துக்கொண்டே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நர்ஸ்கள் போராட்டம்
அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதியத்தில், 3,000 நர்ஸ்கள் பணியாற்றி வருகின்றனர். இடைக்கால பட்ஜெட்டில், எந்த அறிவிப்பும் வராததால், சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில், மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை நர்ஸ்கள் துவக்கினர். 'அரசு உறுதியான முடிவு அறிவிக்கும் வரை, போராட்டம் தொடரும்' என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு நடவடிக்கை
தமிழக அரசு ஊழியர்களின் காலவரையற்ற, வேலை நிறுத்தத்தால், அரசுப்பணிகள் முடங்கி உள்ளன. பேச்சு வார்த்தை நடத்தாத அரசு, நோ ஒர்க்; நோ பே என்ற அடிப்படையில், வேலைக்கு வராத நாட்களுக்கு, ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாது' என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டம் ஓயாது
வேலை நிறுத்த நாட்களுக்கு, நோ ஒர்க், நோ பே என்ற அடிப்படையில், சம்பளம் கிடைக்காது என்பது எங்களுக்கு நன்கு தெரியும். அனைத்தும் தெரிந்து தான் போராட்டத்தில் குதித்துள்ளோம். போராட்டத்தை ஒடுக்க, அரசு எந்த முயற்சியை மேற்கொண்டாலும் எடுபடாது; கோரிக்கைகளை ஏற்று அரசு ஆணைகள் தரும் வரை போராட்டம் ஓயாது என்று அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.