ப்ளஸ்டூ தேர்ச்சி சதவிகிதம் குறைவு… நாகர்கோவிலில் தொடரும் சஸ்பெண்ட் நடவடிக்கை
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மீது தொடரும் நடவடிக்கையால் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் பிளஸ்டூ தேர்ச்சி விகிதம் குறைந்ததாக கூறி இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லீலாவதி, படந்தலமூடு டிகேசி பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணதாஸ் ஆகியோர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பளுகல் பள்ளி தலைமை ஆசிரியர் சசிதரன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான உத்தரவுகள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட 9ம் தேதி இரவே பிறப்பிக்கப்பட்டது.
12 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை:
மேலும் பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவுக்கு காரணமான ஆசிரியர் 12 பேர் மீதும் உங்கள் மீது ஏன் பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி கணித பாட ஆசிரியர் இரண்டு பேரும், இயற்பியல், வரலாறு, கணக்கு பதிவியில் உள்ளிட்ட ஆசிரியர்கள் தலா ஒருவர் வீதம் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர். இதனை போன்று பளுகல் அரசு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி பிரிவில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் கணக்கு பதிவியில் பாடம் நடத்திய ஆசிரியர்கள் இரண்டு பேர், வணிகவியல் மற்றும் என்கனாமிக்ஸ் ஆகிய பாடங்களை கூடுதலாக நடத்தியுள்ளனர்.
முதன்மை கல்வி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களை நேரில் சந்தித்து சஸ்பெண்ட் உத்தரவை வழங்கி சென்றனர். மேலும் இது தொடர்பான தகவல் வெளியானதால் பலரையும் சந்திக்க முடியவில்லை.
இதை தொடர்ந்து சஸ்பெண்டு உத்தரவை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பலரது வீடுகளில் உள்ள சுவரில் சஸ்பெண்ட் உத்தரவை அதிகாரிகள் ஓட்டி சென்றனர். தேர்ச்சி விகிதம் குறைந்ததாக கூறி தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் மட்டும் தலைமை ஆசிரியர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவர்கள் விவாதித்து வருவதாக கூறப்படுகிறது.