கனவுகள் குதிரை ஆகுமென்றால் பிச்சைக்காரர்கள் கூட சவாரி செய்வார்கள்: ஹெச். ராஜா
தென்காசி: கனவுகள் குதிரை ஆகுமென்றால் பிச்சைக்காரர்கள் கூட சவாரி செய்வார்கள். நான் இளங்கோவனை சொல்லவில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
தென்காசி அருகேயுள்ள கடையநல்லூரில் பாஜக பூத் கமிட்டி ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
கனவுகள் குதிரை ஆகுமென்றால் பிச்சைக்காரர்கள் கூட சவாரி செய்வார்கள். நான் இளங்கோவனை சொல்லவில்லை. 5 ஆண்டுகள் மட்டுமல்ல 2019ம் ஆண்டு தேர்தலிலும் பாஜக தான் ஆட்சி அமைக்கும்.
விஜயதரணி அறிக்கையால் மன பாதிப்பு அடைந்து இளங்கோவன் மோடி அரசை விமர்சிக்கிறார். மோடியின் செயல்பாட்டை பிரான்ஸ் நாட்டுக் குழுவினர் பாராட்டியுள்ளனர். பயங்கரவாதத்தை எதிர்க்கும் நாடுகள் இந்தியாவுடன் நேசக்கரம் நீட்டியுள்ளன. பல நாடுகள் இந்தியாவின் நட்பு நாடுகளாக மாறியுள்ளதற்கு மோடியின் சுற்றுப்பயணம் தான் காரணம்.
கல்லூரி மாணவிகள் 3 பேர் இறப்புக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி ஏற்கனவே மாநில தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நீதி விசாரணை தேவை என நானும் கோரிக்கை விடுத்துள்ளேன். மேலும் இந்த 3 மாணவிகள் தவிர அண்ணாமலை பல்கலைக்கழக மாணவியின் மரணம், அதிராமப்பட்டினம் மாணவியின் மரணம் உள்ளிட்ட 5 மரணங்களும் கல்லூரிகளில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் ஏற்பட்டதால் ஒரு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.
தேர்தல் கூட்டணி குறித்து 16 மூத்த தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற குழு கூடி முடிவெடுக்கும். அதற்கான கருத்தை என்போன்றோர் ஏற்கனவே தெரிவித்துள்ளோம், கேரளாவில் 10.3 சதவீதமாக இருந்த வாக்கு விகிதம் உள்ளாட்சி தேர்தலில் 16 சதவீதமாக அதிகரித்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் கேரளாவில் பாஜக ஆட்சி அமைக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜகவின் துணை இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications