"பிசி சிட்டி.. பிசியஸ்ட் சிட்டிசன்ஸ்": இன்று சென்னைக்கு 375வது பிறந்தநாள் ... ஹேப்பி பர்த்டே டூ யூ !
சென்னை: வந்தாரை வாழ வைக்கும் நகரம் எனப் புகழப்படும் சென்னை இன்று தனது 375வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.
இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் ஒன்று என்ற பெருமையுடன் இன்று உலா வரும் நமது சென்னை ஒரு காலத்தில் கிராமமாக இருந்தது என்று கூறினால் உங்களால் நம்புவதற்குக் கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கும். ஆனால், அது தான் உண்மை.
பல்வேறு நிலைகளில் படிப்படியாக வளர்ச்சியடைந்து, பல ஊர்களுக்கு சிம்மச் சொப்பனாக விளங்கும் சென்னைக்கு இன்று 375வது பிறந்தநாள்.
இதோ, சென்னை பிறந்து, தவழ்ந்து, நடந்து வளர்ந்த கதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம்....
சென்னைப்பட்டணம்...
கிராமமாக இருந்த சென்னைப் பட்டிணம் ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னால் மதராசப்பட்டிணம் ஆனது.
காற்று வாங்கிய சாலைகள்...
வண்டி ஹார்ன் ஓசைகளுக்கிடையே நடப்பதற்குக் கூட இடமில்லாமல் வாகன நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ள இன்றைய சாலையில் அன்று மாட்டு வண்டிகள் தான் சென்றுள்ளன.
சென்னையின் பிறந்தநாள்...
1639ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை நகரை கிழக்கு இந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே என்பவர் விலைக்கு வாங்கிப் பதிவு செய்துள்ளார். அப்போதுதான் முதல் முறையாக சென்னை என்ற பெயர் அந்தப் பத்திரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தினத்தையே மக்கள் சென்னையின் பிறந்த தினமாக கொண்டாடி வருகிறார்கள்.
புனித ஜார்ஜ் கோட்டை...
1640ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டைக் கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை முக்கிய வணிக மற்றும் கலாச்சார நகரமாக உருமாறத் தொடங்கியது.
ஓல்ட் இஸ் கோல்ட்....
நாகரீகமான நகரமாக உருமாறியதில் இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களான கொல்கத்தாவை விட 50 ஆண்டுகளும், மும்பையை விட 35 ஆண்டுகளும் பழமையானது சென்னை.
சென்னை...
சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழகத்தின் தலைநகரானது மதராஸ். பின்னர், மதராஸ் கடந்த 1996ம் ஆண்டு முதல் சென்னை என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டு வருகிறது.
375வது பிறந்தநாள்...
இந்நிலையில் இன்று தனது 375வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது சென்னை. வேலை, கல்வி என பல்வேறு இடங்களில் இருந்து வந்துள்ளோருக்கு அடைக்கலம் தந்து வாழ்வாதாரமாக விளங்குகிறது சென்னை.
கொண்டாட்டங்கள்...
சென்னையின் 375வது பிறந்தநாளை சுமார் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கொண்டாடத் தொடங்கிவிட்டனர் நம்ம மக்கள். சென்னை தொடர்பாக ஆல்பம்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சென்னையில் அழகு வித்தியாசமான கோணங்களில் படமாக்கப் பட்டுள்ளது.