ஒரு தலைக் காதலுக்கு பலியான நவீனா குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் இடைக்கால நிதி... ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: ஒருதலைக்காதலால் எரித்து படுகொலை செய்யப்பட்ட சிறுமி நவீனா குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு ரூபாய் ஒரு லட்சம் நிதியை இடைக்கால நிவாரணமாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், வ.பாளையம் கிராமத்தில் கடந்த 30ஆம் தேதி செந்தில் என்பவர் தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, தன்னை காதலிக்க மறுத்த பள்ளி மாணவி நவீனா என்பவரை கட்டிப்பிடித்ததில் செந்தில் உயிரிழந்தார். மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிசிக்சை பலனின்றி ஆகஸ்ட் 3ஆம் தேதி உயிரிழந்தார்.
மாணவியின் உடலுக்கு பாமக முன்னாள் எம்.எல்.ஏ. குரு, பாமக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிருமான பாலு ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது மாணவியின் குடும்பத்திற்கு ரூபாய் 35 ஆயிரம் நிதி உதவி வழங்கினர். அப்போது பாலு பேசுகையில், இதனை நாங்கள் சும்மா விடப்போவதில்லை. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போகிறோம்.
செந்திலுக்கு துணையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.எஸ்.பி. சுருளிராஜனிடம் மனு அளிக்க உள்ளோம். விரும்பாத பெண்ணையும் விரட்டி விரட்டி காதலிக்கும்படி தூண்டியவர்களில் தொடங்கி, கயவன் என்று தெரிந்தும் வக்காலத்து வாங்கிப் பேசியவர்கள் வரை அனைவருமே மாணவி நவீனாவின் கொலைக்குக் காரணமானவர்கள்தான்.
இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடக்காமல் தடுக்க, நவீனா கொலையின் பின்னணியில் உள்ள அனைவர் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி நவீனாவின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்குவதுடன், நவீனா உயிர்நீத்த ஆகஸ்ட் 3ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக தேசிய அளவில் கடைபிடிக்க மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.
இந்நிலையில்தான் நவீனா குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு ரூபாய் ஒரு லட்சம் நிதியை இடைக்கால நிவாரணமாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நவினாவின் தந்தை அங்கப்பன் தொடர்ந்த வழக்கில் இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு மாற்றகோரியும், இழப்பீடு வழங்க கோரியும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என் பிரகாஷ், இந்த வழக்கில் இருவரும் இறந்து விட்ட காராணத்தினால் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற அவசியம் இல்லை என்று கூறினார்.
உயிரிழந்த நவீனா குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாயை இழப்பீட்டை பெற்று வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் கூடுதலாக இழப்பீடு தேவைப்படும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கலாம் என கூறி வழக்கை முடித்து வைத்தார்.