லவ் மேரேஜ் செய்த மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க சேலம் கல்லூரிக்கு கோர்ட் உத்தரவு
சென்னை: காதல் திருமணம் செய்து கொண்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என தனியார் கல்லூரிக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த ஜெ.பாஷில் (20) என்பவரது மனைவி பிரதீபா என்ற ஆயிஷா. படிக்கும் போதே காதல் திருமணம் செய்து கொண்டனர் இவர்கள். இதனால் பிரதீபாவின் பெயர் ஆயிஷா என மாற்றப் பட்டது.
இதனிடையே ஆயிஷா மற்றும் பஷில் இருவருக்கும் பரீட்சை எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்தது. இதனை எதிர்த்து அவர்கள் இருவரும், சென்னை ஹைகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நாமக்கலில் உள்ள பாவை டெக்னாலஜி கல்லூரியில் (பி.இ.) சிவில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறோம். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து, முஸ்லிம் திருமணச் சட்டத்தின்படி கடந்த ஏப்ரல் 12-ந் தேதி திருமணம் செய்துகொண்டோம்.
இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு மே மற்றும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்குரிய கட்டணம் முழுவதையும் செலுத்திவிட்டோம். ஆனால், நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால், எங்களுக்கு செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி வழங்க கல்லூரி நிர்வாகம் மறுக்கிறது. மேலும், அனைத்து மாணவர்களுக்கும் ‘ஹால்டிக்கெட்' கொடுத்தவிட்ட நிலையில், எங்களுக்கு மட்டும் இதுவரை ‘ஹால்டிக்கெட்' வழங்கவில்லை.
செமஸ்டர் தேர்வு எழுத எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்றால், எங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே, செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி வழங்கவும், ஹால்டிக்கெட் வழங்கவும் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு கட்டுப்பாட்டாளருக்கும், பாவை டெக்னாலஜி கல்லூரி முதல்வருக்கும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.மணிகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாளர், பாவை கல்லூரி முதல்வருக்கு அனுப்பிய கடிதம் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த கடிதத்தில், ‘‘பாஷில், பிரதீபா ஆகியோர் வருகை பதிவேடு நூறு சதவீதம் உள்ளதால், மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் செமஸ்டர் தேர்வு எழுத அவர்களுக்கு தகுதியுள்ளது. எனவே, அவர்களுக்கு ‘ஹால்டிக்கெட்' வழங்கி, தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்' என எழுதப்பட்டிருந்தது.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, ‘மனுதாரர்கள் இருவரும், பாவை கல்லூரி முதல்வரை அணுகி ஹால் டிக்கெட்டுக்களை பெற்றுக்கொள்ள வேண்டும். இவர்கள் இருவரையும் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று அந்த கல்லூரி முதல்வருக்கு அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்த வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.