கிண்டியில் கல்லால் தாக்கப்பட்ட பேராசிரியர் மரணம்.. மனநிலை பாதிக்கப்பட்டவரின் வெறிச் செயலால் பரிதாபம்
சென்னை கிண்டியில் மனநிலை பாதிக்கப்பட்டவர் கல்லால் தாக்கியதில் படுகாயமடைந்த கோவை பேராசிரியர், சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கிண்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர், சாலையில் நடந்து சென்ற பேராசிரியர் மீது கல் எறிந்து தாக்கினார். அதில் படுகாயமடைந்த பேராசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று மரணமடைந்தார்.
கோவை மாவட்டம் தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ஜா.சுரேந்தர்நாத் முல்லர். 70 வயதான இவர், கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் சிவில் எஞ்சினியரிங் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இந்த நிலையில், முல்லர் கடந்த 24-ம் தேதி தனது சொந்த வேலை விஷயமாகச் சென்னை வந்தார். பின்னர், முல்லர் கிண்டியில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினார்.
அதனையடுத்து, அன்று காலை முல்லர், தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்து சர்தார் பட்டேல் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதே சாலையில் உள்ள ஒரு வீட்டில் இருந்து வந்த கல் முல்லரின் தலைப் பகுதியை பயங்கரமாகத் தாக்கியுள்ளது.
அதில் பலத்த காயமடைந்த முல்லர், உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்குச் சிகிச்சை பலனின்றி முல்லர் நேற்று மரணம் அடைந்தார். இந்தச் சம்பவம் குறித்துக் கிண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில் முல்லர் மீது கல்லை எறிந்தது அந்த வீட்டில் வசிக்கும் விஜயராஜ் என்பதும், அவர் மனநிலை சரியில்லாதவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக போலீஸார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் நடந்து சென்றவர் மீது கல்லெறிந்து தாக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.