தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்... வானிலை மையம் தகவல்
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கத்தைவிட இந்தாண்டு வெயிலின் தாக்கம் பிப்ரவரி, மார்ச் மாதங்களிலேயே அதிகமாகி விட்டது. பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டியது. பகல் நேரங்களில் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அரசே மக்களைக் கேட்டுக் கொண்டது.
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் திருச்சி, மதுரை, வேலூர், தர்மபுரி, பாளையங்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இம்மாத தொடக்கத்தில் அனல்காற்று வீசியது. இரவு நேரங்களில் கூட வெப்பத்தின் தாக்கம் குறையாமல் மக்கள் புழுக்கத்தில் அவதிப்பட்டனர். இதே நிலை நீடித்தால் கத்தரியில் என்ன ஆவோம் என மக்கள் அஞ்சிக் கொண்டிருந்தனர்.

மழை...
இந்நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்கியதும் வெயில் மேலும் அதிகரித்தது. ஆனால், அது தொடர்ந்து நீடிக்கவில்லை. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து பூமியையும், மக்களையும் குளிர வைத்துள்ளது.இதனால் அப்பகுதியில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு...
இந்த சூழ்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்திற்கு கனமழை வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், "தமிழ்நாட்டில் வங்காளவிரிகுடா கடல் பகுதியின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் இருந்து ஈரப்பதம் கலந்த காற்று வீசுகிறது.

வெப்பசலனம்...
அந்த காற்று தொடர்ந்து அடுத்த 3 நாட்களுக்கு வீசும். வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இன்று தென்மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மட்டும் கனமழை பெய்யும்.

வெப்பம் குறையும்...
தொடர்ந்து 16 மற்றும் 17-ந்தேதிகளில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் அக்னி நட்சத்திரம் காலத்தில் உள்ள வெப்பத்தின் தீவிரம் குறையும்.

மேகமூட்டம்...
சென்னையை பொருத்தவரையில் மேகமூட்டத்துடன் காணப்படும். பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது என்பதால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

மழை அளவு...
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தக்கலை, ஆண்டிப்பட்டியில் 3 சென்டி மீட்டரும், வால்பாறை, மயிலாடியில் 1 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது. தொடர்ந்து இப்பகுதிகளிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன' எனத் தெரிவித்துள்ளனர்.

நெல்லை...
வானிலை மையத்தின் அறிவிப்பின்படி ஏற்கனவே கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நெல்லையில், இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications