இனிமே நாங்க எதுவும் பேச போறதில்ல.. எல்லாத்தையும் தலைவர் பாத்துக்குவார்.. ஃபுல்ஸ்டாப் வைத்த செங்ஸ்
பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் மட்டுமே இனி பேசுவார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை: பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினர் மாறி மாறி பேசி வருவதால் குழப்பம் ஏற்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் குழப்பங்களை தவிர்க்கும் வகையில் குழுத் தலைவர் வைத்திலிங்கம் மட்டுமே பேசுவார் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் குழுக்களும் அமைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் என்று கூட இல்லாமல் சசிகலா குடும்பம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில், ட்ரம்ப் ஜெயித்ததே தன்னால் தான் என ஓபிஎஸ் கூறுவர் என நக்கலடித்தார்.
எரிச்சலால் கிடப்பில் கிடக்கும் பேச்சுவார்த்தை
ஜெயக்குமாறின் இந்த பேச்சு ஓபிஎஸ் தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஓபிஎஸ்க்கு தன்னுடைய நிதியமைச்சர் பதவியையும் விட்டுக்கொடுப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து லோக்சபா எம்பி தம்பிதுரையும் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் என கூறினார். இதிலும் கடுப்பானது ஓபிஎஸ் தரப்பு. இதனால் அந்த அணியினர் அடக்கி வாசிக்கும் வரை பேச்சுவார்த்தை இல்லை என கிடப்பில் போட்டது ஓபிஎஸ் கோஷ்டி.
சர்.பிட்டி பிறந்தநாள் விழா
இந்நிலையில் சர்.பிட்டி தியாகராயர் 166-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது,
மற்றவர்கள் பேச்சால் குழப்பம்
''இரு அணிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றவர்கள் மாறி மாறி கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. அதனால் எங்கள் அணியின் குழு தலைவர் வைத்திலிங்கம் மட்டுமே இனி பேச்சு வார்த்தை நடத்துவார்.
அரசு சிறப்பாக செயல்படுகிறது
கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை நடவடிக்கையை முடுக்கியுள்ளது.விசாரணை முடிவில் உண்மையான குற்றவாளி யார் என்பது தெரிய வரும். சட்டசபையை கூட்டுவது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும். இரு அணிகளும் இணைவதற்கான முயற்சியில் ஈடுபடுவதால் அரசு பணிகள் முடங்குவதாக கூறுவது தவறு. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.