வெடிவழிபாட்டுக்கு முட்டுக்கட்டை போடவே பட்டாசு வெடிக்க தடை?புதிய ஆங்கிளில் எதிர்க்கும் அர்ஜூன் சம்பத்
ராஜபாளையம்: இந்து சமய கலாசாரத்தின் ஒரு அங்கமான வெடிவழிபாட்டுக்கு முட்டுக் கட்டை போடும் வகையில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்படுகின்றன; இதனை திமுக அரசு எதிர்த்து போராட வேண்டியது கடமை என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
ராஜபாளையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அர்ஜூன் சம்பத் கூறியதாவது: ஆண்டாள் தாயார் குறித்து வைரமுத்து மிகவும் அவதூறாக ஒரு கருத்தை பரப்பினார் . இதற்காக தமிழகத்தில் பல காவல் நிலையங்களில் நாங்கள் புகார் கொடுத்தோம் . வழக்கு, பதிவு செய்தோம் - குளத்தூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு அது ராஜபாளையம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை செய்து கடந்த வாரம் அந்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
திருமா, சீமானை கைது பண்ணுங்க! சீனுக்குள் வந்த இமக அர்ஜுன் சம்பத்! பதாகைகளுடன் டெல்லியில் 10 பேர்!
சனாதனப் பேச்சு
திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் சட்டம் ஒழுங்கு விஷயத்திலே கவனம் செலுத்தவில்லை. பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு என செய்து கொண்டே இருக்கிறது. இந்த விஷயங்களில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக சனாதனம், விடுதலை சிறுத்தைகளை வைத்து சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தி மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது.
சட்டம் ஒழுங்கு விவகாரம்
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுகவினர் காவல் நிலையங்களுக்குள்ளேயே வந்து காவல்துறையை மிரட்டுகின்ற அராஜகங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் வீட்டின் மீது குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
பிஎப்ஐ தடை
தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியும் தொடர்ந்து ஆதரித்த வண்ணம் உள்ளனர். அந்த தடை செய்யப்பட்ட தேச இயக்கங்களை ஆதரித்து திண்டுக்கல் கொடைரோடு பகுதியில் சாலை மறியல் நடைபெற்றது. ஆனால் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தமிழகத்தினுடைய வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருக்கின்ற அமைப்புகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் . அந்த இயக்கங்களை, அமைப்புகளைத் தடை செய்யாமல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாது.
வெடி வழிபாடும் பட்டாசு தடையும்
டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்து இருக்கிறார்கள் . சுற்று சூழல் மாசு என்பதை காரணம் காட்டி இந்த தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள் - இந்த தடை உத்தரவை விலக்கிக் கொள்ள மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது திமுகவின் கடமை . பட்டாசு தொழிலை பாதுகாப்பது மத்திய அரசாங்கத்தினுடைய கடமையும் கூட. பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது என்பது இந்து சமய சடங்குகளின் மீது விதித்திருக்கின்ற தடையாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம். வெடி வழிபாடு என்பது நம்முடைய சமயத்திலே கலாச்சாரத்தில் பண்பாட்டில் ஒரு அங்கம் . எனவே இதை காப்பாற்றுவதற்கு இந்த தடையை நீக்குவதற்கும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.