பொன். ராதாகிருஷ்ணன் அமைச்சரானால் தமிழக பாஜக தலைவர் யார்?
சென்னை: தமிழக பாஜகவின் அடுத்த தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் வென்றது. கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட, பொன்.ராதாகிருஷ்ணன், அந்த வெற்றிக்கு சொந்தக்காரர். இவர் ஏற்கனவே வாஜ்பாய் அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவி வகித்தார்.
மேலும் தமிழகத்தில் அதிமுகவின் பிரமாண்ட வெற்றிக்கு நடுவேயும் இந்த தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டியவர். இதனால் மோடி அமைச்சரவையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்று தெரிகிறது.
இல.கணேசன், சி.பி.ஆர்:
ஒன்றுக்கும் மேற்பட்ட பதவியை ஒருவரே வகிக்க கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு வேறு நபரை நியமிக்க அக்கட்சி ஆலோசித்து வருகிறது. அமைச்சரானால், கட்சி பணிகளில் கவனம் செலுத்த முடியாது என்றுதான் பொன்.ராதாகிருஷ்ணனும் கருதுகிறார்.
மோகன் ராஜுலு, வானதி சீனிவாசன்..
புதிய தலைவர் உத்தேச பட்டியலில் பெயரில் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் மோகன் ராஜுலு, வானதி சீனிவாசன் ஆகியோர் பெயர்களும் அதில் அடிபடுகின்றன.
புதிதாக ஒருவருக்கே தலைவர்...
இல.கணேசனும், சி.பி.ராதாகிருஷ்ணனும் ஏற்கனவே தலைவர்களாக பொறுப்பு வகித்தவர்கள். எனவே அவர்களைவிட புதிதாக ஒருவருக்கே தலைவர் பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது.
பொன்.ராதாகிருஷ்ணனின் சிபாரிசு
எனவே மோகன்ராஜுலு அல்லது, வானதி சீனிவாசனுக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் சிபாரிசு மோகன்ராஜுலுவுக்கே போகும் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.